கேரள காவல்துறையினர் 1994ஆம் ஆண்டு கிரையோஜினிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை கைது செய்தனர்.
இந்த வழக்கில் நம்பி நாராயணன் நிரபராதி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறியது.
இந்நிலையில், விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்கையை மையமாக வைத்து 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' எனும் படத்தை எடுக்கவுள்ளதாக நடிகர் மாதவன் அறிவித்திருந்தார். அதுமட்டுமல்லாது இந்தப் படத்தின் மூலம் மாதவன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இதில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.
சி.எஸ். சாம் இசையமைத்துள்ள இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில், நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். ஏப்ரல் 1ஆம் தேதி வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் சமூகவலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் நம்பி நாரயணனும் மாதவனும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' படம் குறித்து பேசினர். ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' ட்ரெய்லரை பார்த்து பாராட்டிய நரேந்திர மோடி நம்பி நாராயணனுக்கு இழைக்கப்பட்ட அநீதி என அப்போது கூறினார்.
'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் நிறைவடைந்து திரை வெளியிட்டுக்கு தயாராக இருக்கிறது. கரோனா காரணமாக இதன் வெளியிட்டு தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படம் அடுத்தாண்டு (2022) ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:'ராக்கெட்ரி' படத்தில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா இசை - சாம் CS பெருமிதம்