தமிழ்நாடு

tamil nadu

ஏர் டாக்ஸியில் பயணிக்க விருப்பமா? 2024இல் தயாராகுங்கள்.. தொடர் சோதனையில் சென்னை ஐஐடி!

By

Published : Jun 2, 2022, 6:19 AM IST

Updated : Jun 2, 2022, 2:36 PM IST

ஓலா, ஊபர் போல இனி ஏர் டாக்ஸியிலும் பயணிக்கும் விதமாக, சென்னை ஐஐடியின் எரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் துறையினர் புதிய சிறிய ரக விமானத்தை தயார் செய்து வருகின்றனர்.

ஏர் டாக்ஸியில் பயணிக்க விருப்பமா?
ஏர் டாக்ஸியில் பயணிக்க விருப்பமா? 2024 ல் தயாராகுங்கள்.. தொடர் சோதனையில் சென்னை ஐஐடி!

சென்னை: சிறிய ரக எலக்ட்ரிக் விமானங்களை உருவாக்கும் முயற்சியில், இந்த நிறுவனத்தை சென்னை ஐஐடி பேராசிரியர் சத்யா சக்ரவர்த்தி , அவரது மாணவர் பிரஞ்சல் மேத்தா இணைந்து e Plane எனும் நிறுவனத்தைத் தொடங்கி இருக்கின்றனர். இந்த நிறுவனம், பேட்டரி மூலம் செயல்படும் விமானங்களை தயாரிப்பதற்கான ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

இந்த விமானத்தில் இருவர் பயணிக்க முடியும். மேலும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர் செல்ல முடியும். இவர்கள் தற்போது சென்னை ஐஐடி வளாகத்தில் National Centre for Combustion Research & Development என்னும் மையத்தில் சிறிய விமானத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டில் சென்னை ஐஐடியில் e6 test flight உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆராய்ச்சியை மேற்கொண்டதில் தற்பொழுது e 200 flight ஜூலை மாதம் சோதனை செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு பேட்டரி மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சிறிய ரக விமானத்தில் விமானியுடன் ஒரு பயணி மட்டுமே செல்ல முடியும்.

ஏர் டாக்ஸியில் பயணிக்க விருப்பமா?

e 200 டாக்ஸி: இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்காக, சென்னை ஐஐடியின் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் சக்ரவர்த்தி சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “சென்னை ஐஐடியில் ஏர் டாக்சி தயாரித்து வருகிறோம்.

சாலை போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் ஓலா, ஊபர் வாகனத்தினை போன்று பயன்படுத்த ஏர் டாக்சி தயார் செய்யப்பட்டு வருகிறது. இது சிறிய ரக விமானத்தை போன்று 2 இருக்கைகளை கொண்டது.

e200 டாக்சியின் வடிமைப்புகளில் 200 கிலோ எடையை எடுத்துச் செல்லும் வகையில் முழுவதும் தயார் செய்யப்படவுள்ளது. இவ்வாறு தயாரான பின்னர், ஜூலை மாதம் இதனை சோதனை செய்யவுள்ளோம். அதனைத் தொடர்ந்து ப்ரோட்டோ டைப் ஏர் டாக்சி, அக்டோபர் மாதம் தயார் செய்யப்பட்டு மனிதர்களை ஏற்றிச் செல்லும் வகையில் 2024ஆம் ஆண்டு இறுதியிலோ அல்லது 2025 ஆம் ஆண்டு முதலிலோ மனிதர்களை ஏற்றிச் செல்லும் வகையில் கொண்டு வரவுள்ளோம்.

சிறிய ரக விமானம் பேட்டரியால் இயங்கும் வகையில் தயார் செய்து வருகிறோம். இதனால் ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும். இதற்குப் பிறகு மீணடும் 15 நிமிடம் சார்ஜ் போட வேண்டும். நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கி தவிக்காமல், வேகமாக குறிப்பிட்ட பகுதிக்கு சென்றடையும் வகையில் ஏர் டாக்சியை இயக்கலாம்.

ஏர் டாக்ஸி

எத்தனை பேர் பயணிக்கலாம்? இதனை 10 முதல் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 முதல் 4 முறை இயக்க முடியும். தற்போது உருவாகிவரும் ஏர் டாக்சி சிறியதாக செய்யப்படுவதால், இதனை வீட்டின் கூரையின் மீதும் இறக்க முடியும். இதற்காக 500 சதுர அடி இடம் இருந்தால் போதுமானது. முதலில் இரண்டு பேர் அமரும் வகையில் வடிவமைத்து வருகிறோம்.

தற்பொழுதும் ஓலா, ஊபர் போன்ற கார்களில் ஒருவர் மட்டும் செல்கின்றனர். 4 பேர் செல்லும் வகையில் வடிவமைத்தால், அதற்காக மற்றவர்கள் வரும் வரையில் காத்திருக்க வேண்டியதிருக்கும். முதலில் மக்களிடம் ஏர் டாக்சியை பயன்படுத்துவதற்கான பழக்கம் வந்த பின்னர், குறிப்பிட்ட இடத்தில் இருந்து இயக்கினால், மக்கள் வந்து செல்வாார்கள்.

எனவே 2024 ஆம் ஆண்டு சான்றிதழ்களை பெற்று, இறுதியில் மனித போக்குவரத்திற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். சிறிய ரக விமானத்தை இயக்குவதற்கான சான்றிதழ்களை பாதுகாப்புதுறை, விமானத்துறையிடம் பெற வேண்டும். அதற்கு முதலில் கொள்கை அளவில் அனுமதி பெற வேண்டியுள்ளது. முதலில் சரக்குப் போக்குவரத்திற்கு 2023 ஆம் ஆண்டில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

ரன்வே உண்டா? அதில் மருந்துப் பொருள்களை எடுத்துச் செல்வது, மருத்துவத்துறைப் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். மத்திய அரசு ட்ரோன் 500 கிலோ மீட்டர் தூரம் நகரத்திற்கு வெளிப்புறத்தில் பறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நகரத்திற்குள் பறப்பதற்கு அக்டோபர் மாதம் அனுமதி அளிக்கப்பட இருக்கிறது. 100 கிலோமீட்டர் என்றால், சென்னையில் இருந்து அருகில் இருக்கும் நகரங்களுக்கு அல்லது நகரின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல முடியும்.

இந்த விமானங்களை வாடிக்கையாளர்கள் இயக்க முடியாது. பயிற்சி பெற்ற எங்களுடைய விமானிகள் மட்டுமே இயக்க முடியும். இது விமானம் என்றாலும் ட்ரோன் போல இருந்த இடத்தில் இருந்தே மேலே சென்று பறந்து, மேலே இருந்து கீழே இறங்கும். இதற்கு ரன்வே என்பதே தேவையில்லை. அதற்கான வசதியுடன் வீட்டின் கூரையிலும் இறக்க முடியும்.

தரையில் இருந்து 400 அடிக்கு மேல் செல்வதற்கு அனுமதி தேவை. எங்களது விமானம் 1,500 அடிக்கு மேல் செல்லும். அதனால் முறையான அனுமதி இல்லாமல் பறக்க முடியாது. இதற்கான பராமரிப்பு செலவும் குறைவாகவே இருக்கும். விமானம் என்றவுடன் கட்டணம் அதிகமாக இருக்கும் என கருதத் தேவையில்லை.

ஓலா, ஊபரை விட இரண்டு அல்லது 2.5 மடங்கு அளவில் கட்டணத்தை நிர்ணயம் செய்ய இருக்கிறோம். அதிகளவில் பயன்பாட்டிற்கு வரும் போது கட்டணம் மேலும் குறையும்” எனத் தெரிவித்தார். இதனைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்த்து வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தூய்மை இந்தியா திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கப்போகும் சென்னை ஐஐடியின் கழிவு எரிப்பு ஆலை!

Last Updated : Jun 2, 2022, 2:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details