தமிழ்நாடு

tamil nadu

காசா நகர மருத்துவமனை மீது தாக்குதல்; 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஜோ பைடனின் ஜோர்டான் பயணம் தள்ளி வைப்பு!

By ANI

Published : Oct 18, 2023, 8:39 AM IST

Gaza, Al-Ahli hospital blast: காசா நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 500 பேர் உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

காசா: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான போர், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில், ஏவுகணைத் தாக்குதலாக ஆரம்பித்த போர், தற்போது தரைவழி தாக்குதலில் வந்து நிற்கிறது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது விலைமதிப்பற்ற உயிரை இழந்துள்ளனர். மேலும், பலர் தங்களது உடமைகள், குடியிருப்பு மற்றும் உறவுகள் ஆகியவற்றை இழந்து உள்ளனர்.

இதனிடையே, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு தங்களது ஆதரவை அளித்துள்ளன. இந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், பல பன்னாட்டு தன்னார்வல அமைப்புகளும் செய்து வருகின்றன. மேலும் அமெரிக்கா, ராணுவ உதவிகளையும் இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறது.

இந்த நிலையில், நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் எல்லைப் பகுதியான காசா நகரில் உள்ள அல்-அஹில் என்ற மருத்துவமனை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில், மருத்துவமனை முழுவதுமாக சேதம் அடைந்தது மட்டுமல்லாமல், 500 பேர்களின் உயிரை இழக்கச் செய்திருக்கிறது. இதனை, ஹமாஸ் ஆல் செயல்பட்டு வரும் சுகாதாரத்துறை தரப்பு உறுதி செய்து உள்ளது. மேலும், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில்தான் இந்த மருத்துவமனை பாதிப்படைந்து உள்ளதாக ஹமாஸ் குற்றம் சாட்டி உள்ளது.

அதேநேரம், ஹமாஸின் தவறுதலான வான்வழித் தாக்குதலில்தான் காசா நகர் மருத்துவமனை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், காசா நகர மருத்துவமனை மீதான தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து உள்ளார்.

அது மட்டுமல்லாமல், காயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என வாழ்த்துகள் தெரிவித்த அவர், இது தொடர்பாக முக்கியத் தலைவர்கள் உடன் தனிப்பட்ட முறையில் பேச உள்ளதாகவும் கூறி உள்ளார். மேலும், இஸ்ரேலுக்கு புறப்பட்ட அதிபர் ஜோ பைடன், ஜோர்டானுக்குச் செல்லும் தனது பயணத்தை தள்ளி வைத்து உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.

முன்னதாக, காசா நகர் மருத்துவமனை தாக்கப்படத்தை அடுத்து, பாலஸ்தீன அதிபர் அப்பாஸ், ஜோர்டானில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க உள்ளதாக அறிவித்தார். இதனை, அவர் ஜோர்டானின் மன்னர் இரண்டாவது அப்துல்லாவிடம் ஆலோசித்த பிறகு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இஸ்ரேல் - பாலஸ்தீனிய போர் எதிரொலி: சிறுவன் கொலை; பெண் படுகாயம்.. வீட்டு உரிமையாளர் கைது!

ABOUT THE AUTHOR

...view details