தமிழ்நாடு

tamil nadu

அமெரிக்கர்களைப் போலவே ஆப்கனியர்களை மீட்பதும் முக்கியம் - ஜோ பைடன்

By

Published : Aug 21, 2021, 11:14 AM IST

ஆப்கனிலிருந்து அமெரிக்கர்களை மீட்பது போலவே ஆப்கனியர்களை மீட்பதும் எங்களுக்கு முக்கியம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

President Joe Biden
President Joe Biden

வாஷிங்டன்:அமெரிக்க ராணுவப்படைகள் ஆப்கனை விட்டு வெளியேற தொடங்கியதிலிருந்துதாலிபான்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டனர். பத்து நாள்களாக நடைபெற்ற தாக்குதலின் விளைவாக, நாட்டின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

தலைநகர் காபூல், ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபான்களால் கைப்பற்றப்பட்டது. 20 ஆண்டுகளாக அதிபராக இருந்த அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். தாலிபான் ஆட்சிக்கு மறுப்புத் தெரிவித்து ஆப்கன் மக்களும், மற்ற நாட்டு மக்களும் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர்.

ஆப்கன் விமான சேவை ரத்து

இந்தப் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் காபூல் விமான நிலையத்திற்கான போக்குவரத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதிமுதல் ரத்து செய்தன. அதன்படி ராணுவ விமானங்கள் தவிர மற்ற விமானங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இதனால், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடியாமல் பல்வேறு நாட்டு மக்கள் தவித்தனர். ஆப்கனில் மீதமுள்ள அமெரிக்க ராணுவப் படையினர் காபூல் விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

இதனிடையே ஆகஸ்ட் 16ஆம் தேதி அமெரிக்க ராணுவ வீரர்கள், விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதனால் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

விமான ஓடுபாதைகளில் ஓடி, விமானங்களில் ஏற மக்கள் முயற்சிக்கும் காணொலிகளும் வெளிவந்தன. குறிப்பாக மூவர், விமானத்தில் தொங்கியபடி விமானத்தில் ஏறி கீழே விழும் காணொலி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் ஆப்கன் நாட்டு தேசிய கால்பந்து வீரரும் ஒருவர். இதனால், காபூல் விமான நிலையத்தை மீண்டும் திறக்கக்கோரி, பல்வேறு நாட்டினர் கோரிக்கை வைத்துவந்தனர்.

காபூல் விமான நிலையம் மீண்டும் திறப்பு

அதையடுத்து ஆகஸ்ட் 17ஆம் தேதி மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்காக, காபூல் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பென்டகனின் கூட்டுத் தலைமை அலுவலர் ஹாங்க் டெய்லர் தெரிவித்தார். அதனடிப்படையில் பல்வேறு நாடுகள், ராணுவ விமானங்கள் மூலம் தங்களது நாட்டு மக்களை மீட்டுவருகின்றனர்.

சில நாடுகள் ஆப்கன் மக்களுக்கும் அடைக்கலம் அளிக்க முன்வந்துள்ளன. குறிப்பாக, இந்தியா இ-எமர்ஜென்சி விசாவை (அவசர நுழைவு இசைவு) அறிமுகப்படுத்தி இந்திய, ஆப்கன் மக்களை மீட்க முன்வந்துள்ளது. இதனிடையே, நேற்று (ஆகஸ்ட் 20) அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், காபூல் விமான நிலையத்தில் 6,000 பேர் நாட்டை விட்டு வெளியேவதற்காக குவிந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அமெரிக்கர்களைப் போலவே ஆப்கனியர்களை மீட்பதும் முக்கியம்

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம், "ஆப்கனிலிருந்து வெளியேறத் துடிக்கும் அமெரிக்கர்களை, கட்டாயம் அவர்களது வீட்டிற்கு கொண்டுசேர்ப்போம். அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற 5,200 அமெரிக்க ராணுவப் படையினர் காபூல் விமான நிலையத்தில் உள்ளனர்.

அமெரிக்கர்களைப் போலவே ஆப்கனியர்களை மீட்பதும் எங்களுக்கு முக்கியமானதாகும். இதுவரை தாலிபான்கள் அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய நாளிலிருந்து இதுவரை அமெரிக்கர் அல்லாதவர்கள் ஐந்தாயிரத்து 700 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாள்களில் மட்டும் இரண்டாயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேறத் துடிக்கும் அனைவரும் வெளியேற்றப்படுவர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆப்கன் துணை தலைவரின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

ABOUT THE AUTHOR

...view details