தமிழ்நாடு

tamil nadu

அசௌகரியங்களுக்கு நாங்கள் தான் காரணம், ஏஆர் ரகுமானை தாக்காதீர்கள் - இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வேண்டுகோள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 1:36 PM IST

A.R.Rahman music conertஅசௌகரியங்களுக்கு அனைத்திற்கும் நாங்களே பொறுப்பு ஏற்றுக் கொள்கிறோம். ஏஆர் ரகுமானை தாக்கி எழுதாதீர்கள் என ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

அசௌகரியங்களுக்கு நாங்கள் தான் காரணம், ஏஆர் ரகுமானை தாக்காதீர்கள்

சென்னை: பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திரைத்துறை பயணத்தின் 30வது ஆண்டை கொண்டாடும் வகையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில், நேரலை இசை நிகழ்ச்சி (Live In Concert) கடந்த செப்.10ஆம் தேதி மாலை 7 மணிக்கு துவங்கி 11 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதற்காக அரங்கு அமைக்கப்பட்டு சில்வர், கோல்டு, பிளாட்டினம், என்று பல்வேறு படிநிலை விலையில் பிரத்யேக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் அரங்கினுள் கூட்டம் அலை மோதியதாக கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் வைத்திருந்தவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் அவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.‌ இந்த கூட்டத்தில் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாகவும் கூறுகின்றனர்.

மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த இடமே போராட்டக் களமாக காட்சியளித்தது. தற்போது இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த் வீடியோ மூலம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில், "ஏஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த அத்தனை ரசிகர்களுக்கும் எனது முதல் நன்றி. நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்துக் கொடுத்த ஏஆர் ரகுமானுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் நிறைய அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளது. டிக்கெட் வாங்கிய ரசிகர்களும் உள்ளே வர முடியாத சூழல் ஏற்பட்டது. ஏ.ஆர் ரகுமானின் இசையை கேட்டு மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த முழு ஏற்பாடும் செய்யப்பட்டது.

ஒரு சில காரணங்களால் கூட்ட நெரிசலால் உள்ளே வரமுடியாமல் போனதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அனைத்திற்கும் நாங்களே பொறுப்பு ஏற்றுக் கொள்கிறோம். ஏ.ஆர். ரகுமான் தன்னால் முடிந்த அளவு நிகழ்ச்சியை சிறப்பாக செய்து கொடுத்தார். ஆனால் சமீப காலமாக அவரை தாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

அவருக்கும் இந்த நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த அசௌகரியங்களுக்கு காரணம் நாங்கள் தான், ரகுமானை தாக்காதீர்கள். நாங்கள் அதிக டிக்கெட் விற்கவில்லை. அதிக கூட்டம் ஏற்பட்டதால் தான் இந்த பிரச்சனை நடந்தது. மீண்டும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.‌ முறையான அனுமதி பெற்றுத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி ஆனால் நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்களுக்கு கண்டிப்பாக பணம் திரும்ப தரப்படும். மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் ரகுமான் அவர்களை தாக்கி எழுதாதீர்கள்.‌ விரைவில் அனைவரது பணமும் திரும்பி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: HBD KARTHIK : தமிழ் சினிமாவின் நவரச நாயகன் கார்த்திக்... பிறந்த தினம் இன்று!

ABOUT THE AUTHOR

...view details