மதுரை: விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படமும், அஜித்தின் 'துணிவு' திரைப்படமும் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின. இப்படங்களை ஜனவரி 11, 12, 13 மற்றும் 18 ஆகிய 4 நாட்களில் காலை 9.00 மணிக்கு ஒரு சிறப்பு காட்சியில் திரையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ரசிகர்களுக்காக பல்வேறு திரையரங்குகள் அதிகாலை மற்றும் நள்ளிரவில் சிறப்புக் காட்சிகளை நடத்தின. இதில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதியன்று நள்ளிரவிலும் அதிகாலையிலும் துணிவு மற்றும் வாரிசு படங்களை திரையிட்டதாக மதுரை மாவட்டத்தில் உள்ள 34 திரையரங்குகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.