தமிழ்நாடு

tamil nadu

'இந்தி இல்லாமல் வாழ முடியுமா?' - டி.ராஜேந்தரின் திடீர் இந்தி பாசம்; காரணம் என்ன?

By

Published : Jan 20, 2023, 7:00 PM IST

'மோனிஷா என் மோனலிசா' (Monisha En Monalisa) படம் மூலம் பான் இந்தியா படத்தை முன்னோடியாக அறிமுகம் செய்தேன் எனவும், ஈழத்தமிழர்கள் தான் தனது இன்ஸ்பிரேஷன் எனவும், இந்தி இல்லாமல் வாழ முடியுமா? எனவும் இயக்குநர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

இந்தி இல்லாமல் வாழ முடியுமா? டி.ராஜேந்தர் கேள்வி

டி.ஆர்.ரெக்கார்ட்ஸ் (TR Records) வழங்கும் நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் 'தமிழ்' மற்றும் 'இந்தி' மொழிகளில் எழுதி, இசையமைத்து தயாரித்த 'வந்தே வந்தே மாதரம்' என்னும் இசை ஆல்பம் வெளியீட்டு விழா (Vande Vande Mataram music album launch) சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்று (ஜன.20) நடைபெற்றது.

அப்போது இந்த இசை ஆல்பம் வெளியீட்டு தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய டி.ராஜேந்தர், 'என்னையும், என் மகனையும், என் குடும்பத்தையே கலைத்துறையிலே நான் கால் ஊன்றிய காலத்திலிருந்து என்னை வாழவைத்துக் கொண்டிருக்கக் கூடிய உங்களுக்கு வணக்கம்' என்று கண் கலங்கியப்படி, வணக்கம் கூறினார். மேலும் அவர், 'இன்றைக்கு என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். நான் நிறைய படங்களை பண்ணி ரெக்கார்ட்ஸ் செய்துள்ளேன். இன்றைக்கு என்னுடைய டி.ஆர்.ரெக்கார்ட்ஸ் ஆரம்பித்து சினிமா தவிர, மற்ற பாடல்களை தயாரித்து இசையுடன் வெளியிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்’ என்று கூறினார்.

'முன்னோடியான பான் இந்தியா படம்' எனது:கலைஞர் ஆட்சிக் காலத்தில் 'மோனிஷா என் மோனலிசா' படத்தை அப்போதே 'பான் இந்தியா' (Pan India Movie) படமாக முன்னோடியாக எடுத்தேன். பல முயற்சிகளை மேற்கொண்டு உள்ளேன். ஒரு பான் இந்தியா படம் எடுக்க முயற்சி செய்து இருந்தேன். அப்போது தான், எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

தற்போது, கடவுளின் அருளால் நான் மீண்டும் வந்துள்ளேன். அடுத்ததாக இந்த பாடலை தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியிட முடிவு செய்திருக்கிறேன். பாகுபலி(Baahubali), ஆர்ஆர்ஆர்(RRR), காந்தாரா(Kantara), கேஜிஎப்(KGF) போன்ற படங்கள் இந்திய சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றுள்ளது.

திராவிட மொழிகளுக்கு தாய்மொழி 'தமிழ்' தான். அது தொன்மையான மொழி. அது தாயைப் போன்றது. மதம் சார்ந்து நிறைய பாடல்களை பாடி இருக்கிறேன். 'இந்தி' என்று சொன்னால் அதில் 'சமஸ்கிருதம்' கலந்திருக்கும்’ என்றார்.

இலங்கைத் தமிழர்கள் குறித்து பேசியவர், ’எல்லா மொழிகளையும் ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்கின்றனர். பெரிய பெரிய சினிமாவில் திமிங்கலம் வாழ்கிறது. சாதாரண மனிதர்கள் வாழ முடியவில்லை' என்று உணர்ச்சிப் பூர்வமாகப் பேசினார்.

'சிறிய தயாரிப்பாளர்களுக்கு திரையரங்கு கிடைக்கவில்லை. அதனால் பான் இந்தியா அளவில் படம் பண்ண வேண்டும். பள்ளிக்கூட குழந்தைகளுக்கு நாட்டுப்பற்றை வளர்க்க வேண்டும் என இதைச் செய்து வருகிறேன். நீங்கள் தான் இதை உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும். என் பேரனுக்கு 5 ஆண்டுகளாக நான் பயிற்சி கொடுத்துள்ளேன். அவனுக்கு நடனம் ஆட கற்றுக்கொடுத்து இருந்தேன். அவனை வைத்து பான் இந்தியா அளவில் படம் எடுக்க முயற்சி செய்து வந்தேன்.

இந்தி எங்கு தான் இல்லை:அப்போது தான், எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவனை பெரிதாக அறிமுகம் செய்ய இருந்தேன். அதனால் தான், தற்போது நாட்டிற்காக என் பேரன் ஜேசனை இதில் அறிமுகம் செய்தேன். இறைவன் இருப்பதால் தான் என் குடும்பத்தில் கலை உள்ளது' என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய டி.ராஜேந்தர், 'ரூபாய் நோட்டில் கூட அனைத்து மொழிகளும் உள்ளன. ரயிலில் இந்தி எழுதி இருக்கிறது என்பதற்காக அதில் போகாமல் இருக்கிறோமா?. நாம் இந்தி இல்லாமல் வாழ முடியுமா? டெல்லியில் இந்தி பேசுகின்றனர். இந்தி என்பது வேறு. ஈழத்தமிழர்கள் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். என் தாய்மொழி 'தமிழ்' என்றாலும், அனைத்து மொழிகளிலும் பேசுகிறேன். தமிழுக்காக பாடல் வைத்துள்ளேன். மணிரத்னம் இதற்கு முன்பே இந்தியில் படம் பண்ணியுள்ளார்.

காதல் படம்:காந்தாரா போன்ற படங்கள் போகும்போது, அதனுடன் சேர்ந்து நானும் இந்திக்கு எனது பேரனை கொண்டு செல்ல உள்ளேன். அடுத்து காதல் பாடல் செய்ய உள்ளேன். கலைஞர் ஆட்சிக் காலத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதே, மோனிஷா என் மோனலிசா படத்தின் மூலம் அப்போதே நான் இந்தியில் பாடல் பாடினேன். மும்தாஜை அறிமுகம் செய்து வைத்தேன். தாய்நாட்டுக்காக, தமிழ் தேசத்துக்காக நான் ஒரு விஷயத்தை செய்ய இருக்கிறேன். ஆனால், அதை இப்போது சொல்ல விரும்பவில்லை' என்று கூறினார்.

முதலமைச்சர் காதிலும் ஒலிக்கும்:முதலமைச்சரை சந்தித்து இந்தப்பாடல் குறித்து ஏதும் பேசுவீர்களா என்ற கேள்விக்கு, ’நான் உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது இரண்டு முறை முதலமைச்சர் என்னை சந்தித்தார். நான் திமுகவின் முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தேன். எனக்கும் ஸ்டாலினுக்கும் நல்ல நட்பு உள்ளது. எனது மகனுக்கு உதயநிதி நண்பராக உள்ளார். நல்ல கருத்து பாடலைத் தான் பாடியுள்ளேன். இது தமிழ்நாடு முதலமைச்சர் காதிலும் ஒலிக்கும் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.

'பாரத மாதா கி ஜே' (Bharat Mata Ki J) என்று சொன்னால் பாஜக என்று சொல்கின்றனர் என்ற கேள்விக்கு, ''ஜெய்ஹிந்த்' (Jai Hind) என்று சொன்னால் அவர்களை காங்கிரஸ் என்று சொல்லி விடலாமா?' என்றார்.

சிம்புவின் திருமணம் எப்போது?: 'பிரதமர் வேறு கட்சியாக இருக்கலாம். ஆனால், வாஜ்பாய் காலத்தில் இருந்து எனக்கு இந்தி தெரியும். சிம்பு திருமணம் குறித்த கேள்விக்கு நான் நாட்டுக்காக உடல்நிலை சரியில்லாமல் கூட பாடல் பாடியுள்ளேன். எனது குடும்பத்தை பற்றி கேள்வி கேட்டு சங்கடப்படுத்த வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. அதிமுக-பாஜக நாளை பேச்சுவார்த்தை..

ABOUT THE AUTHOR

...view details