தமிழ்நாடு

tamil nadu

பிரம்மாண்டமான 'கலைஞர் 100' விழாவில் பங்கேற்கும் திரைப்பிரபலங்கள்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 12:40 PM IST

Kalaignar 100: சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடக்க உள்ள 'கலைஞர் நூற்றாண்டு விழா'வில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து நடத்தும் 'கலைஞர் நூற்றாண்டு விழா' சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.

கருணாநிதி தமிழ் சினிமாவிற்கு ஆற்றிய பங்கை சிறப்பிக்கும் வகையில், தமிழ் சினிமாவில் உள்ள 24 சங்கங்களும் இணைந்து இந்த பிரம்மாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு, கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தமிழ் திரையுலகம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை நடத்துகிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது எழுத்து மற்றும் வசனங்களால் பல திரைப்படங்களுக்கு உயிர்க் கொடுத்தவர். இந்நிலையில், அவரை சிறப்பிக்கும் வகையில், இந்த பிரம்மாண்ட விழாவுக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட 24 சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழா கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவிருந்த இருந்தது. ஆனால், அப்போது மிக்ஜாம் புயல், வெள்ள நிவாரணப் பணிகள் காரணமாக அன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு (kalaignar 100 Century Vizha) விழாவானது இன்று (ஜன.6) மாலை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழா

முன்னதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் விழாக்குழு சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை நேரில் சென்று சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தவிர, அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட பிற நட்சத்திரங்களுக்கும் அழைப்பு வழக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவர்களும் 'கலைஞர் 100'-ல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோர் பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், அஜித் வருவாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழா

இந்த நிகழ்வில் தென்னிந்திய பிரபலங்கள் பலரும் சென்னையில் இருப்பதால் பங்கேற்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும், இந்தி திரையுகில் இருந்து அமிதாப் பச்சன், மலையாள திரையுலகில் இருந்து மோகன் லால், மம்முட்டி ஆகியோருக்கும் கன்னட பட உலகிலிருந்து சிவராஜ் குமார், தெலுங்கு திரையுலகிலிருந்து சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு 24 சங்கங்கள் சார்பில் இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறுவது, பலரது ஆர்வத்தையும் ஈர்த்துள்ளது. சுமார், ஆறுமணி நேரம் நடைபெற இருக்கும் இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க:அழகை மட்டும் வைத்து சினிமாவில் நிலைக்க முடியாது.. கத்ரின கைஃபை புகழ்ந்த விஜய்சேதுபதி!

ABOUT THE AUTHOR

...view details