சென்னை:தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் பல்வேறு விஷயங்களுக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஒப்புதல் பெற்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டும் கால்ஷீட் வழங்காத நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்திய நடிகர்கள் என பல தரப்பில் பட்டியல் எடுத்து நடிகர்களின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா மற்றும் யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என முடிவெடுத்து இருக்கின்றனர். இதில் சில நடிகர்களுக்கு நடிகர் சங்கத்திடம் விளக்கம் கேட்டு சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், நடிகர் சங்கம் கொடுக்கும் பதிலை வைத்து அடுத்த கட்ட முடிவை எடுக்க அவர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகர் சிம்பு மீது ரெட் கார்டு புகார்கள் வந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் அந்த பிரச்னை சூடு பிடித்துள்ளது.
அதேபோல், மறைந்த தயாரிப்பாளர் கே.பி.பிலிம்ஸ் பாலுவிடம் முன் தொகை பெற்று அவரின் படத்தில் நடிக்காத காரணத்திற்காக விஷால், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு கால்ஷீட் வழங்காததற்காக எஸ்.ஜே.சூர்யா, தயாரிப்பாளர் மதியழகன் புகாரின் அடிப்படையில் அதர்வா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், யோகி பாபு மீது பல தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து முறையான பதில் கொடுத்தால் அவர்களுடைய படங்களுக்கு ஒத்துழைப்பு தருவது என்றும், திருப்திகரமான பதில் அளிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ரெட் கார்ட் விதிப்பது என்றும் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
மேலும், இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி கூறுகையில், "நடந்து முடிந்த பொதுக்குழுவின் நடிகர்கள் குறித்த தீர்மானம் மட்டுமல்ல, நிறைய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2021 -2022ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் வரவு - செலவுக் கணக்கிற்கு ஒப்புதல் பெறப்பட்டது.