தமிழ்நாடு

tamil nadu

குடியரசுத் தலைவர் பாராட்டிய 'கருவறை’ குறும்படம் - இயக்குனர் கணேஷ் பாபு நெகிழ்ச்சி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 4:23 PM IST

Karuvarai short film: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கருவறை படம் பார்த்து விட்டு, இந்த சம்பவங்கள் அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்றும், இது தொடர்பாக விரைவில் குடியரசு தலைவர் உங்களுக்கு கடிதம் எழுதுவார்கள் என்று சொன்னதாகவும் கருவறை குறும்பட இயக்குநர் கணேஷ் பாபு கூறியுள்ளார்.

கருவறை குறும்படத்தை பார்த்துவிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பாராட்டினார்
கருவறை குறும்படத்தை பார்த்துவிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பாராட்டினார்

சென்னை: மாப்ளே லீப் புரொடக்சன்ஸ் & பல்ஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் இயக்குநர் கணேஷ் பாபு தயாரித்து இயக்கியுள்ள படம் கட்டில். இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற கட்டில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் கணேஷ் பாபு, கே.எஸ். ரவிக்குமார், மோகன் ராஜா, நடிகை சிருஷ்டி டாங்கே, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாடலாசிரியர்கள் வைரமுத்து, மதன் கார்க்கி மற்றும் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் பேசுகையில், ”வைரமுத்துவுக்கு முன் பேச வேண்டும் என்று தமிழ்த்தாயை வேண்டி கொண்டேன். ஏனென்றால் வைரமுத்து 7 முறை தேசிய விருது வாங்கியவர். வைரமுத்து உடனான பயணம் நாட்டாமை படத்தில் துவங்கியது. ஸ்ரீகாந்த் தேவா வந்தாலே எனர்ஜி வந்து விடும்” என்று படக்குழுவினரை பாராட்டி பேசினார்.‌

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், ”இந்த படத்தில் ஒரு பாடல் பண்ணிருக்கிறேன். கட்டிலை ரொம்ப அழகாக, பல தலைமுறை தாண்டிய உறவாக சொல்லி இருக்கிறார் இயக்குநர். கட்டிலை மையமாக வைத்து காதல் கதையும் அழகாக சொல்லி இருக்கிறார் கணேஷ் பாபு. அப்பாவின் வரிகளை பார்த்து தான் பாடல் எழுதக் கற்றுக் கொண்டேன். அப்பாவுடன் இணைந்து சில படங்களில் தான் பாடல் எழுதியிருக்கிறேன், அதற்கு இயக்குநருக்கு நன்றி. கட்டில் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகை சிருஷ்டி டாங்கே பேசுகையில், ”இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க சொன்னார்கள். முதலில் அம்மாவாக சொல்லும் போதே யோசித்தேன்.‌ ஆனால் ரசிகர்களுக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இயக்குநர் கணேஷ் பாபுவுடன் வேலை செய்தது நல்ல அனுபவமாக இருந்தது” என கூறினார். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், ”ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.‌ வைரமுத்து வரிகளில் 3 பாடல்கள் பண்ணியதே பெரிய பாக்கியம். இந்த படம் குடும்ப கதையாக நிச்சயமாக வெற்றி பெறும்” என்றும் கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் இயக்குநர் மோகன் ராஜா பேசுகையில், “வைரமுத்து முன் நின்று பேசுவதே பேசிய வாய்ப்பு. முதல் மரியாதை பாடலுக்கு பாடல் கேசட்டில் விளக்கம், வார்த்தை வரும் அது இன்னும் நியாபகம் இருக்கிறது. உங்களுடைய ரசிகனாய் இருந்து வளர்ந்தேன். உங்கள் ஆசிர்வாதத்தால் ஜெயம் ரவி இன்று நன்றாக இருக்கிறான். மேலும் கே.எஸ் ரவிக்குமாரை போல சிறப்பான இயக்குநராக இருக்க வேண்டும் என்றும், எம். குமரன் படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இல்லை என்றால், அந்த படத்தின் வெற்றி இல்லை.‌ அவர் உருவாக்கும் தாக்கம், முயற்சி தாண்டி 100 படங்களுக்கு இசையமைத்துள்ளார்” என கூறியுள்ளார்

பின்னர் பேசிய இயக்குநரும், நடிகருமான கணேஷ் பாபு, “25 வருடமாக நான் சினிமாவில் இருக்கிறேன். வைரமுத்துவை சிறு வயதில் சந்திக்கும் போதெல்லாம் என் கையில் புத்தகங்கள் இருக்கும். வைரமுத்துவின் கம்பீரம் என்னை ரொம்ப பாதித்தது. இந்த வருடம் என்னுடைய படைப்பு தேசிய விருது வாங்கியது. பல சர்வதேச விருதுகளுக்கு என் படம் போனது பெருமை தான். இது ஸ்ரீ காந்த் தேவாவுக்கு 101வது படம். இவரால் எனக்கு பெரிய கௌரவம் கிடைத்தது.

நேற்று முன்தினம் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து தொலைபேசியில் அழைத்து, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கருவறை குறும்படம் பார்த்து விட்டு பாராட்டியதாகவும் , இந்த சம்பவங்கள் குடியரசு தலைவர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்று சொன்னதாகவும், இது தொடர்பாக விரைவில் குடியரசு தலைவர் உங்களுக்கு கடிதமாக எழுதுவார்கள் என்று சொன்னதாகவும் கூறினார்.

இந்த கட்டில் படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்கியிருந்த கருவறை என்ற குறும்படத்திற்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவிற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது. அந்த தேசிய விருதை இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, வைரமுத்து மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் கைகளில் கொடுத்து பெற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க:“கலைஞானி கமல்ஹாசன்” - முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details