தமிழ்நாடு

tamil nadu

வெள்ளையாக இருப்பவரே நடிகராக முடியும் என்ற மனநிலையை உடைத்தவர் 'ரஜினிகாந்த்' - இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 10:14 PM IST

Jigarthanda DoubleX: 'வெள்ளையாக இருப்பவர் தான் நடிகராக முடியும் என்ற மனநிலையை உடைத்தவர் தான் ரஜினிகாந்த்' என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

வெள்ளையாக இருப்பவரே நடிகராக முடியும் என்ற மனநிலையை உடைத்தவர் 'ரஜினிகாந்த்' - இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

திருச்சி: மெசேஜ் கூறும் 'ஜிகர்தண்டா' போன்ற படங்களுக்கு மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு என நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார். 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் வாழ்வில் மிக முக்கிய மைல்கல் ஆகும் என நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda DoubleX) என்ற திரைப்படம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருச்சியில் அந்த திரைப்படம் ஓடும் திரையரங்கிற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இன்று (நவ.14) ரசிகர்களுடன் சேர்ந்து திரைப்படம் பார்த்தனர். பின்னர், ரசிகர்களுடன் கலந்துரையாடிய இம்மூவரும் ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதையடுத்து மூன்று பேரும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர். முதலில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, 'கமர்சியல் படங்களுக்கு தரப்படும் ஆதரவை போல 'ஜிகர்தண்டா' போல, மெசேஜ் கூறும் படங்களுக்கு மக்கள் தற்போது ஆதரவும் வரவேற்கும் அளிப்பது மக்களின் ரசிக்கும் திறன் உயர்ந்து உள்ளதை காட்டுகிறது. உலக அளவில் தமிழ் சினிமா சென்றுள்ளதை காட்டுகிறது. இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என ஒரு முக்கியமான நபர் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய வெற்றியை இந்த படத்திற்கு கொடுத்ததற்கு மக்களுக்கு நன்றி' எனக் கூறினார்.

இவரைத்தொடர்ந்து பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், 'என்னுடைய வாழ்க்கையில் இந்த படம் மிக முக்கிய மைல்கல்லாக இருக்கும். மக்களோடு அமர்ந்து படம் பார்த்தது மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்தது. மக்கள் நல்ல வரவேற்பையும் ஆதரவையும் இந்த படத்திற்கு தந்துள்ளார்கள். இந்த படம் வெற்றி அடையும் என்பது தெரியும். ஆனால், இவ்வளவு பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கவில்லை. அதற்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

பின்னர் பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், 'இந்தப் படத்தை மக்கள் ரசித்தும் பார்க்கிறார்கள், உணர்ந்தும் பார்க்கிறார்கள். காடுகளில் வாழ்ந்த மனிதர்கள் சந்தித்த பிரச்சனைகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் ஆகியவற்றை குறித்து பேச வேண்டும் என இந்த படத்தில் பேசி உள்ளோம். மக்கள் அதை உணர்ந்து ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அது எனக்கு மிக மகிழ்ச்சி அளிக்கிறது.தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த நடிகர் ராகவா லாரன்ஸ், கவ் பாய் கதாபாத்திரம் நான் தேடி செல்லவில்லை அது என்னை தேடி வருகிறது நான் விரும்பி ஏற்றுக் கொள்கிறேன்' என்றார்.

கார்த்திக் சுப்புராஜ் பதிலளிக்கையில், '1970 காலகட்டங்களில் வெள்ளையாக இருப்பவர்கள் தான் நடிகராக முடியும் என்கிற ஒரு மனநிலை இருந்தது. அதை உடைத்து மிகப்பெரிய ஹீரோவானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படம் அந்த காலகட்டத்தில் மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த கதைக்கு அதுதான் தொடக்கப் புள்ளியாக இருந்தது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த. திரைப்படத்தை பார்த்து விட்டார் மிகவும் நன்றாக இருக்கிறது என எங்களிடம் தெரிவித்தார் விரைவில் அவரே படம் குறித்து கருத்து தெரிவிக்க உள்ளார். சின்ன பட்ஜெட் பெரிய பட்ஜெட் என எந்த வித்தியாசமும் இல்லாமல் நல்ல படங்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள்' என்றார்.

இதையும் படிங்க:சென்னையின் பிரபல திரையரங்கில் கிடா திரைப்படக் காட்சிகள் ரத்து - இயக்குநர் ஆதங்கம்!

ABOUT THE AUTHOR

...view details