தமிழ்நாடு

tamil nadu

39 ஆண்டுகளுக்கு பின் இணைந்த வைரமுத்து - சித்ரா கூட்டணி!

By

Published : Mar 23, 2023, 11:23 AM IST

பாடலாசிரியர் வைரமுத்துவும், பின்னணி பாடகி சித்ராவும் 39 ஆண்டுகளுக்கு பின்னர் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் பாடலுக்காக இணைந்துள்ளனர்.

After 39 years Vairamuthu Chitra team up for the song of Karumegangal Kalaiginrana movie
கருமேகங்கள் கலைகின்றன படத்தின் பாடலுக்காக 39 ஆண்டுகளுக்கு பிறகு வைரமுத்து சித்ரா கூட்டணி இணைந்துள்ளது

கருமேகங்கள் கலைகின்றன படத்தின் பாடலுக்காக 39 ஆண்டுகளுக்கு பிறகு வைரமுத்து சித்ரா கூட்டணி இணைந்துள்ளது

சென்னை: சின்னக் குயில் என்று அன்போடு அழைக்கப்படுபவர் பிரபல பின்னணி பாடகி சித்ரா. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இளையராஜா இசையில் இவர் பாடிய பாடல்கள் எப்போதும் தனி சுகம் தருபவை.

இவர் எஸ்.பி.பி, மனோ, யேசுதாஸ் என முன்னணி ஜாம்பவான்களுடன் நிறைய பாடல்களை பாடியுள்ளார். இன்றைய இளம் தலைமுறை இசை அமைப்பாளர்கள் படங்களிலும் பாடல்கள் பாடி வருகிறார். அனிருத் தொடங்கி தமன் வரை எல்லோரது இசையிலும் பாடல்கள் பாடியுள்ளார். சமீபத்தில் விஜய் நடித்த வாரிசு படத்தில் தமன் இசையில் "ஆராரி ராரிரோ" என்ற பாடல் பாடி இருந்தார்.‌ இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தங்கர் பச்சான் இயக்கி உள்ள "கருமேகங்கள் கலைகின்றன" என்ற படத்தில் சித்ரா பாடல் பாடி உள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து உள்ளார். இப்பாடலை வைரமுத்து எழுதி உள்ளார். இதன் பாடல் பதிவின் வீடியோ தற்போது வெளியிடபட்டுள்ளது. 39 ஆண்டுகளுக்கு முன்னர் வைரமுத்து எழுதிய "பூஜைக்கேத்த பூவிது" என்ற பாடலை சித்ரா பாடி இருந்தார். அதுதான்‌ வைரமுத்து வரிகளில் சித்ரா பாடிய முதல் பாடலாகும்.

இதுகுறித்து வைரமுத்து, "39ஆண்டுகளுக்குப் முன் எழுதிய பூஜைக்கேத்த பூவிது பாடலை பாடிய அதே பாடகி சித்ராவை நான் பாடல் பதிவில் சந்தித்தேன். அதே குரல்.. அதே கனிவு.. அதே பணிவு.." என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் தங்கர் பச்சான் பாடலை பற்றி குறிப்பிடும் போது "நான் ஒளிப்பதிவாளனாக அறிமுகமாகிய (மலைச்சாரல்-1990) திரைப்படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதினார்.

அப்படத்தில் பாடகி சித்ராவும் பாடினார். எனது இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்திலும் மூவருமே இணைந்து பணியாற்றுகின்றோம். தொடர்ந்து திரைக்கலையுலகில் மூவருமே பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது. இந்த பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களை ஹரிஹரன், ஜிவி.பிரகாஷ், சத்யபிரகாஷ், சித்ரா, சைந்தவி, கங்கை அமரன் உள்ளிட்டோர் பாடி உள்ளனர். மேலும், இப்படத்தில் பாரதிராஜா, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. மேலும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் குறித்த அடுத்தகட்ட அறிவிப்பு வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கர் பச்சான் எப்போதும் மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் கதைகளை இயக்குவதில் கைதேர்ந்தவர் என்பதால் கருமேகங்கள் கலைகின்றன படத்துக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: இயக்குநர் அட்லியை மறைமுகமாக தாக்கிய கே.ராஜன்!

ABOUT THE AUTHOR

...view details