தமிழ்நாடு

tamil nadu

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: 10 ஆண்டுகள் சிறை பெற்ற தொழிலாளி!

By

Published : May 14, 2021, 5:03 PM IST

இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு மகிளா நீதிமன்றம்
ஈரோடு மகிளா நீதிமன்றம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள நகலூர் சின்னத்தம்பிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணா துரை (54). இவர் செங்கல் சூளைத் தொழிலாளி. இவர் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் மனைவியைப் பிரிந்துள்ளார். பின்னர் கடந்த 18 ஆண்டுகளாக வேறு ஒரு பெண்ணுடன் திருமண பந்தத்தில் இருந்து வந்துள்ளார். பின்னர் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பெண்ணும் அண்ணா துரையை விட்டுப் பிரிந்து விட்டார்.

அதனால் தனியாக இருந்த அண்ணா துரை, அவ்வப்போது அவருக்குப் பழக்கமான பகுதிகளுக்கு சென்று அங்கு தெரிந்தவர்களிடம் பேசி வருவது வழக்கம். கடந்த 2020ஆம் ஆண்டு ஜுலை 15ஆம் தேதியன்று மதியம் ஒரு மணியளவில், அவருக்குத் தெரிந்த நபர்களை சந்திக்க நகலூரையொட்டிய ஒரு கிராம பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அனைவரும் தெரிந்தவர்களாக இருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் ஒன்பது வயது சிறுமிகள், இரண்டு பேர் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடியுள்ளனர்.

அவர்களைப் பார்த்த அண்ணா துரை, ஊஞ்சலில் வைத்து நான் ஆட்டி விடுகிறேன் என்று கூறியுள்ளார். சிறுமிகளும் அவரை ஏற்கெனவே தெரிந்த நபர் என்பதால் சரி என்று ஒப்புக்கொண்டனர். ஒரு சிறுமி ஊஞ்சலில் உட்கார்ந்ததும் அவரைத் தள்ளி விடுவது போன்று உடலில் தொடக்கூடாத பகுதிகளில், கைகளை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமி கீழே இறங்கி விட்டார். அது தெரியாத ஊஞ்சலில் அமர்ந்திருந்த இன்னொரு சிறுமிக்கும் அதே போன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இரண்டு சிறுமிகளும் அங்கிருந்து ஓடிச்சென்று அவரவர் வீடுகளில் இதுகுறித்து கூறியுள்ளனர். அதைத் தெரிந்து கொண்ட அண்ணா துரை அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். பின்னர் சிறுமிகளின் பெற்றோர், பவானி அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் கொடுத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் அவரைத் தேடி வந்தனர். அவர் பர்கூர் பகுதியில் செங்கல் சூளையில் தங்கி, வேலை செய்து தலைமறைவாக இருந்தார். பின்னர் அவரைக் கடந்த ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியன்று காவல் துறையினர் கைது செய்தனர்.

இவ்வழக்கை இன்று(மே.14) விசாரித்த ஈரோடு மகிளா நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலதி, சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ், இரண்டு பிரிவுகளில் தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

அந்த இரண்டு பிரிவுகளிலும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் என மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தவும், அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக தலா மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார்.

மேலும் அந்தத் தீர்ப்பில், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரத்தை தீர்ப்பு வெளியான ஒரு மாத காலத்துக்குள் பாதிக்கப்பட்ட சிறுமிகள் இரண்டு பேருக்கும் வழங்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: நீயா படம் போல் வஞ்சம் தீர்க்கிறதா பாம்புகள் - கர்நாடகாவில் வினோத சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details