தமிழ்நாடு

tamil nadu

மணல் கடத்தல் வழக்கில் திமுக எம்.பி. மகன் மீது வழக்குப்பதிவு - நெல்லை போலீசார் அதிரடி

By

Published : Sep 15, 2022, 11:01 PM IST

நெல்லையில் மணல் கடத்தல் வழக்கில் திமுக எம்.பி.யின் மகன் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

நெல்லை:திமுக எம்.பி.ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்குச் சொந்தமான லாரிகள் உரிய அனுமதியின்றி குவாரி மணலுடன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் போலீசார் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, அவரைக் கைது செய்யும் முயற்சியிலும் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

நெல்லைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாராக ஐபிஎஸ் அலுவலர் சரவணன் பொறுப்பேற்ற பிறகு, மாவட்டம் முழுவதும் கனிமவளம் கடத்தல் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் அதிக பாரங்களை ஏற்றிச்செல்லும் லாரிகளை கண்காணிக்கத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் சார்பில் காவலர்கள் ஆங்காங்கே திடீர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு மணல் கடத்தலில் ஈடுபடும் லாரிகளைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதேபோல், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளும் தொடர்ச்சியாக பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குவாரி மணல் கடத்தல் வழக்கில் நெல்லை திமுக எம்.பி. ஞானதிரவியத்தின் மகன் மீது காவல் நிலையத்தில் இன்று (செப்.15) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, நெல்லை மாவட்டம், பழவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் - உவரி சாலையில் விஸ்வநாதபுரம் ஜங்ஷன் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த இரண்டு டாரஸ் லாரிகளை மடக்கி சோதனையிட்டனர்.

அதில் எந்தவித அரசு அனுமதியும் நடைச்சீட்டும் இல்லாமல் தலா ஐந்து யூனிட் கிரசர் மணல் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரிகளை ஓட்டி வந்த அம்பாசமுத்திரத்தைச்சேர்ந்த ரமேஷ், சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஜெயபாலன் ஆகிய இருவரையும் கைது செய்து, லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் இரண்டு லாரிகளும் நெல்லை ஆவரைக்குளத்தைச்சேர்ந்த திமுக எம்.பி. ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்குச் சொந்தமானது என்று ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், பழவூர் காவல் நிலையத்தில் தற்போது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்) மூன்றாவது குற்றவாளியாக எம்.பி. ஞானதிரவியத்தின் மகன் தினகரனின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனால், விரைவில் தினகரன் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே, நெல்லை கல்குவாரி விபத்தை தொடர்ந்து ஆட்சியரின் நடவடிக்கையால், குவாரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் குவாரிகளைத் திறக்க அமைச்சர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை, எம்.பி. ஞானதிரவியம் நேரடியாக மிரட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, அவரது சுயலாபத்துக்காகவே இதுபோன்று மாவட்ட ஆட்சியரை எம்.பி. ஞானதிரவியம் மிரட்டுவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்தனர். இதுபோன்ற நிலையில் குவாரி மணல் கடத்தல் வழக்கில் எம்.பி. ஞானதிரவியத்தின் மகன் சிக்கியுள்ள சம்பவம் நெல்லை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காவி நிறத்தில் காங்கிரஸ் அலுவலகம் - சமூக வலைதளத்தில் வைரலானதால் சர்ச்சை; ஸ்கோர் செய்த பாஜக

ABOUT THE AUTHOR

...view details