தமிழ்நாடு

tamil nadu

காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் செயல்பட தடை - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

By

Published : Jun 2, 2021, 11:59 PM IST

மதுரை: காமராஜர் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக உள்ள மூன்று பேராசிரியர்கள் செயல்படத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக
மதுரை காமராஜர் பல்கலைக்கழக

மதுரையைச் சேர்ந்த லயோனல் அந்தோணி ராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்லத்துரை இருந்த காலகட்டத்தில் இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர்கள் பலருக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டன.

இதில் தகுதியற்ற பலருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் உயர்மட்டக் குழு விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையிலான உயர்மட்டக் குழு விசாரணை செய்து முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்து அறிக்கையளித்தது.

முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிண்டிகேட், துணைவேந்தருக்கு அதிகாரம் கொடுத்தது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், முறைகேடாக வழங்கப்பட்ட பதவி உயர்விற்குத் தடை விதித்தும், உயர்மட்டக் குழுவின் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை உடனடியாக நிறைவேற்றவும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

ஏற்கனவே இந்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், உயர்மட்டக் குழு அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அடங்கிய அமர்வு முன்விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், உயர்மட்டக் குழுவின் பரிந்துரைப்படி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும் ஏன் கால தாமதம் எனக் கேள்வி எழுப்பி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக உள்ள பேராசிரியர்கள் சுதா, தங்கராஜ், நாகரத்தினம் ஆகிய 3 பேரும் செயல்படத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்து, வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details