திருச்சி ரெட்டைவாய்க்கால் ரோட்டைச் சேர்ந்த அண்ணாமலை, ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், எங்கள் குடியிருப்புப் பகுதியில் 4,608 சதுர அடியில் பூங்காவிற்காக ஒதுக்கி மணிகண்டம் ஊராட்சியில் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் 23 அடி சாலைக்காக ஒதுக்கப்பட்டது.
பின்னர் இந்த இடத்தை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. இதனால், பூங்காவிற்கான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு பெற்று கட்டுமானப் பணி நடக்கிறது. இது குறித்து உடனடியாக திருச்சி மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டுமென மாநகராட்சி உதவி கமிஷனர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து ஆக்கிரமிப்பாளர் தரப்பில் திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே, வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான நடவடிக்கை எடுக்க முடியாது என மாநகராட்சி உதவி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இது சட்டவிரோதம். எனவே, அவரது உத்தரவை ரத்து செய்யவும், பூங்கா இடத்திலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர்.