மதுரை மாவட்டம் காயாம்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஆதிக்க சாதியினர் மற்றும் பட்டியலின மக்களுக்கென இரண்டு வெவ்வேறு திருகு குழாய்கள் அமைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து அந்த ஊரைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி காளிதாஸ் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "இங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இரண்டு திருகு குழாய்கள் இருந்து வருகிறது. ஒரு திருகு குழாயின் வழியே ஆதிக்க சாதியினர் வாழ்கின்ற தெருக்களுக்கும் மற்றொரு திருகு குழாய் வழியே பட்டியலின மக்கள் வாழ்கின்ற தெருக்களுக்கும் இங்கிருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த முறையை அகற்றக்கோரி பலமுறை மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
அதுமட்டுமன்றி இருக்கின்ற தண்ணீரைப் பகிர்ந்து அளிப்பதிலும் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இதன் காரணமாக பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தடுக்கவேண்டும்" என வேதனையுடன் பகிர்ந்துகொண்டார்.