தமிழ்நாடு

tamil nadu

ஆதரவற்ற முதியோருக்கு அன்புச் சேவை புரியும் பாக்கியரதி ராமமூர்த்தி!

By

Published : Mar 8, 2020, 12:02 AM IST

சென்னை: நீண்ட நெடுகாலம் வாழ்ந்து, காலத்தையும் கையோடு அழைத்துக் கொண்டு, யாருமற்றவர்களாய் நிற்கும் எண்ணற்ற முதியோரை, தன் அன்பால் அரவணைத்து அவர்களுக்கென ஒரு இல்லத்தையும் எழுப்பி தாய்ச்சேவை புரியும் ஆனந்தம் இல்ல நிறுவனர் பாக்கியரதி ராமமூர்த்தி பற்றி உலகப் பெண்கள் நாளான இன்று தெரிந்து கொள்வோம்...

home
home

நிர்கதியாய் நிற்கும் ஆதரவற்ற முதியோரை தாயன்போடு அரவணைத்துக் கொள்கிறது ஆனந்தம் இல்லம். சென்னை - அம்பத்தூரைச் சேர்ந்த பாக்கியரதி ராமமூர்த்தியால் நிறுவப்பட்டுள்ள இந்த இல்லம் முதியோர்களுக்கான இலவச இல்லமாகவும், ஏழை மாணவர்களுக்கான கல்விக்கூடமாகவும் திகழ்ந்து வருகிறது. ஆதரவற்ற முதியோர்கள் மீது ஏற்பட்ட அன்பும், அனுதாபமுமே, ஆனந்தம் இல்லத்தை தொடங்கக் காரணமாக அமைந்தது என்கிறார், பாக்கியரதி ராமமூர்த்தி.

பல சவால்களை கடந்து தனது நண்பர்களின் உதவியோடு தொடங்கப்பட்ட 'ஆனந்தம் இல்லம்' தற்போது நூற்றிற்கும் அதிகமான ஆதரவற்ற முதியோர்களுடன் குடும்பமாக செயல்பட்டு வருவதாகப் பெருமிதம் தெரிவிக்கிறார் அவர். 'ஆனந்தம் இல்லம்' மற்ற முதியோர் இல்லத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்றே கூறவேண்டும். இங்கு முதியோர்கள் தங்குவதற்கு எந்த விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மேலும், அவர்களுக்கு எந்தவித சொத்தும், மகன்-மகள் உறவுகளும் இருக்கக்கூடாது என்பதே நிபந்தனையாக இருக்கிறது.

இதுபற்றி பேசிய 'ஆனந்தம் இல்லத்தின்' நிறுவனர் பாக்கிய ரதி ராமமூர்த்தி, இங்குள்ள ஒவ்வொரு முதியோர்களுக்கும் ஒரு கதை உண்டு எனத் தெரிவித்தார். மேலும் இங்கு நாங்கள் குடும்பமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகத் தெரிவித்த அவர், முதியோருக்கு இலவச மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு, அவர்கள் சிறப்புற பராமரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஆனந்தம் இல்லத்தில் வசிக்கும் முதியோர் ஒருவர், இங்கு வந்தப் பிறகு தான் இழந்த மகிழ்ச்சியைத் தான் பெற்றதாகத் தெரிவித்தார். தன்னை அம்மாவாக ஏற்று பாக்கியரதி பார்த்துக்கொள்வதாகவும், தானும் அவரை தன் மகளாய் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வார்த்தைகளில் அன்பு கலந்தார்.

'ஆனந்தம் இல்லம்' வெறும் முதியோர் இல்லமாக மட்டும் செயல்படாமல் இலவச மருத்துவ சேவை மற்றும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகளையும் வழங்கி வருகிறது. ஆனந்தம் மருத்துவ சேவை மையத்தை நிறுவி, சுற்றியுள்ள 18 கிராமப்புற மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவையும் வழங்கி வருகிறார்கள். அதேபோல் சுற்றுபுற கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளி ஏழை மாணவர்களுக்கு, மாலை நேரத்தில் இலவசமாக பாடம் எடுத்தும், மாணவர்களின் கல்விக்கு உதவித் தொகை, புத்தகம், பள்ளிச்சீருடை போன்றவற்றையும் வழங்கி வருகின்றனர்.

பாக்கியரதி ராமமூர்த்தியின் இப்பெரும் சேவையை பாராட்டி 2015ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு சிறந்த சமூக சேவகருக்கான விருதை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது. பாக்கியரதி ராமமூர்த்தியின் சேவை இத்தோடு நின்றுவிடவில்லை. இதோ அடுத்த கட்டமாக சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி, ஏழை மாணவர்களுக்கான ஆரம்பப் பள்ளி போன்ற சேவைகளை அவர் விரைவில் தொடங்க உள்ளார். பல சவால்களுக்கு மத்தியில் பாக்கியரதி ராமமூர்த்தியின் தாய் சேவை தொடர்ந்து சமூகத்தில் ஓங்கி வருவது பல பெண்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது என்றே கூறவேண்டும்.

ஆதரவற்ற முதியோருக்கு அன்புச் சேவை புரியும் பாக்கியரதி ராமமூர்த்தி!

இதையும் படிங்க: வேட்டியை மடிச்சுக்கட்டி நாற்றுநட்ட முதலமைச்சர் பழனிசாமி! - விவசாயிகள் ஆரவாரம்

ABOUT THE AUTHOR

...view details