தமிழ்நாடு

tamil nadu

ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சைக்கு எந்த தேவையும் ஏற்படவில்லை - சசிகலா

By

Published : Oct 19, 2022, 6:52 AM IST

ஜெயலலிதாவுக்கு அன்றைய சூழலில் ஆஞ்சியோ சிகிச்சை செய்வது தொடர்பாக எந்த தேவையும் ஏற்படவில்லை என்று AIIMS மருத்துவர்கள் உட்பட அனைத்து மருத்துவர்களும் முடிவு எடுத்தார்கள். ஆனால், இந்த ஆணையம் யூகத்தின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

VK Sasikala Responds To Report Faulting Her On Jayalalithaa Death
VK Sasikala Responds To Report Faulting Her On Jayalalithaa Death

சென்னை:இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அரிசியலாக்குவதை பொதுமக்கள் யாரும் ஏற்கமாட்டார்கள். உண்மைக்கு என்றும் வலிமை அதிகம் அதைவிட என் அக்கா, நம் இதயதெய்வம் அம்மா என் அருகிலேயே இருந்து நடப்பவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்று என் மீது பழிபோடுவது ஒன்றும் புதிது இல்லை. இந்த நொடிவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதைப்பற்றி கவலைப்பட்டு இருந்தால் எங்களால் அரசியலில் இந்த அளவுக்கு சாதித்து இருக்க முடியாது. அதே சமயம் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதுதான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு நான் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டவுடன், என் மனதில் தோன்றியது என்னவென்றால், ஜெயலலிதா உடன் தெருங்கி பழகிய முக்கிய அரசியல் தலைவர்கள், ஜெயலலிதாவுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள், அவரது நலனுக்காக பாடுபட்டவர்கள் என்று எல்லோரையும் அழைத்து, கழக முன்னோடிகள், நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பெரிய அளவில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்துவது, ஜெயலலிதா ஏழை எளிய மக்கள் பயனுறும் வகையில் மக்களுக்காக ஆற்றிய சேவைகள், எண்ணிலடங்கா மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து நிறைவேற்றுவது என்று எண்ணி இருந்தேன்.

விதி வசத்தால் நானோ சிறைக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இங்கு இருந்தவர்கள் என்ன செய்தார்கள்? எதை சாதித்தார்கள் என்பதை கழகத் தொண்டர்களும், நாட்டு மக்களும் நன்றாக அறிவார்கள். ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக, அவருடைய மரணத்தையே அரசியலாக்கிவார்கள். கழகத்திற்கு எதிரானவர்கள், கழகத்தை அழிக்க நினைத்தவர்கள் குறிப்பாக திமுகவினர் ஜெயலலிதாவின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த நினைந்தது, நிறைவேறியது. அதற்கு நம் கட்சியினரே பலிகடா ஆனார்கள் என்பது தான் மிகவும் வேதனையான ஒன்று.

என்னை அரசியலில் இருந்து ஓரம்கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம் அதற்கு ஜெயலலிதாவின் மரணத்தை சர்ச்சை ஆக்கியது தான் மிகவும் கொடுமையானது. நானும், ஜெயலலிதாவும் ஒரு தாய் வயிற்றில் பிறக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நாங்கள் என்றைக்கும் நல்ல சகோதரிகளாக, நட்பிற்கு இலக்கணமாகவே வாழ்ந்தோம். இது இறைவன் இப்பிறவியில் எனக்களித்த பெரும் வரமாக எண்ணுகிறேன்.

ஜெயலலிதாவின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள். தற்போது, இவர்கள் பங்குக்கு என்னை விசாரிப்பதாக சொல்கிறார்கள். எத்தனை முறை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் ஜெயலலிதா மரணத்தைப் பற்றி விசாரித்து கொண்டே இருக்கலாம் ஆனால், உண்மை என்றைக்கும் மாறாது. ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த வித சந்தேகமும் கிடையாது. ஜெயலலிதா உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருந்துவமனையில் முறையான சிகிச்சைகள் அளித்து நன்றாக குணமடைந்து வீட்டிற்கு திரும்ப இருந்த நிலையில் துரதிஷ்டவசமாக தம்மையெல்லாம் திர்கதியாக விட்டுச் சென்றார் என்பதுநாள் எதார்த்தமான உண்மை. இந்த எதார்த்தத்தை கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்.

விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமாக சொல்லப்பட்டது என்னவென்றால் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துமனைக்கு கொண்டுசென்ற காரணமும், அங்கு சிகிச்சை அளித்த விதத்தையும் விசாரிக்கத்தான் என்று செய்திகள் வந்ததுள்ளன. உச்ச நீதிமன்றம் கூட இந்த விவகாரத்தில் 30-11 2021 அன்று ஒரு தெளிவான உத்தரவை வழங்கியிருக்கிறது. ஆனால் இந்த விசாரணை ஆணையம் தன்னுடய அதிகார வரம்பை மீறி தேவையற்ற அனுமானங்களை சொல்லி என் மீது பழி போட்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? எங்களுடைய உறவு குறித்து இந்த ஆணையம் யாரையோதிருப்திபடுத்தும் எண்ணத்தில், யாருடைய அரசியல் ஆதாயத்திற்கு உதவுகின்ற நோக்கத்தில் இப்படிப்பட்ட தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

2012 முதல் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் இடையிலான உறவு சரியில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படிதெரியும் யார் இதைப்பற்றி ஆணையத்திடம் சொல்வது. இறந்த போன ஜெயலலிதா இவர்களிடத்தில் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் போது இப்படி ஒரு பொய்யான, அபத்தமான கருத்தை ஆணையம் தெரிவிக்க காரணம் என்ன? அதன் உள்நோக்கம் என்ன? இது யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டு இருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

இந்த ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் ஜெயலலிதாவின் மருந்துவ சிகிச்சைவில் ஒருபோதும் தான் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்த விதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும், எந்த எந்த மருந்துகள் தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவ குழுவினரே தான் முடிவெடுத்து உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள். என்னுடைய நோக்கமெல்லாம் ஜெயலலிதாவுக்கு முதல் தர சிகிச்சை தர வேண்டும் என்பது தான். என்னுடைய ஆலோசனைகளை பெற்று மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய அளவில் அப்பல்லோ மருத்துவனை ஒரு சாதாரண மருத்துவமனை கிடையாது.

அதோபோல ஜெயலலிதாவுக்கு அன்றைய சூழலில் ஆஞ்சியோ சிகிச்சை செய்வது தொடர்பாக எந்த தேவையும் ஏற்படவில்லை என்று AIIMS டாக்டர்கள் உட்பட அனைத்து டாக்டர்களும் முடிவு எடுத்தார்கள். ஆனால், ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள். என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறேன். இதுதொடர்பாக என்னிடம் எந்த வித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன். ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக எதிர்க்கக்கூட துணிவில்லாதவர்கள் அவர் மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை யாரும் இனிமேல் ஆதரிக்கமாட்டார்கள்.

நம் தலைவர்களின் பெயரையும் புகழையும் யாராலும் அவ்வளவு எளிதில் அழித்து விடமுடியாது. நான் இருக்கின்றவரை, இந்த மனித இனம் இருக்கின்றவரை தம் இருபெரும் தலைவர்களான புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோர் பெயர் இப்பூவுலகில் நிலைத்து நிற்கும் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஆறுமுகசாமி விசாரணை ஆணைய பரிந்துரையின் படி மேல் நடவடிக்கை - தமிழக அரசு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details