தமிழ்நாடு

tamil nadu

சிறையில் மரணித்தவரின் உடல் மறு உடற்கூராய்வு

By

Published : Dec 13, 2021, 5:22 PM IST

சிறையில் இறந்த தனது கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மறு உடற்கூராய்வு நடத்தி அது காணொலியாகவும் எடுக்கப்பட்டது.

சிறையில் உயிரிழந்தவரின் உடல் மறுஉடற்கூராய்வு
சிறையில் உயிரிழந்தவரின் உடல் மறுஉடற்கூராய்வு

சென்னை: செங்குன்றம் எடப்பாளையம் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் அறுப்பு சீனிவாசன் என்ற சீனிவாசன் (35). மதுரவாயலில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் சீனிவாசனை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி மதியம் சீனிவாசனின் மனைவி ஜான்சிராணி புழல் சிறைக்குச் சென்று, அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

அதன்பின் வீட்டிற்கு வந்த 2 மணி நேரத்திற்கு மேல் ஜான்சிராணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் சீனிவாசன் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜான்சிராணி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, அவரது கணவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மறு உடற்கூராய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவு

இதனையடுத்து தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் தன்னுடைய தரப்பு மருத்துவர் முன்னிலையிலேயே உடற்கூராய்வு நடக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ஆனால் அதற்கு முன்னரே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சீனிவாசனின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜான்சிராணி, மறு உடற்கூராய்வு நடத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் மூலமாகச்சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இதையடுத்து மறு உடற்கூராய்வு செய்யவும், பாதிக்கப்பட்டவரின் தரப்பு மருத்துவர் முன்னிலையில் உடற்கூராய்வு நடத்தவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, நேற்று (டிசம்பர் 12) மதியம்சீனிவாசனின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட ஜான்சிராணி தரப்பு மருத்துவர், மாதவரம் குற்றவியல் நீதித் துறை நடுவர் ஜெய்சங்கர் முன்னிலையில் உடற்கூராய்வு நடந்தது. மேலும், இது காணொலியாகவும் பதிவுசெய்யப்பட்டது.

மேலும் சிறைக்குள் சீனிவாசன் இறந்தது தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 176 (1ஏ)(1) என்பதின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஸ்டாலின் ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details