தமிழ்நாடு

tamil nadu

யாழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யக்கோரி முதலமைச்சர் கடிதம்!

By

Published : Apr 15, 2022, 8:29 PM IST

இலங்கைத் தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், உணவு, காய்கறிகள், தானியங்கள், மருந்துகள் ஆகியவற்றை அனுப்ப உரிய வசதி செய்து தரவேண்டும் என்றும்; யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணம்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுதலை செய்ய கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கடிதம்!
யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுதலை செய்ய கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளை மேற்கொள்ளுமாறும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், 'கடந்த 31-3-2022 அன்று பிரதமர் அவர்களை தான் சந்தித்தபோது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு ​​இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாடு அரசு வழங்கத் தயாராக உள்ளது எனத் தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கடந்த 7-4-2022 அன்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருடனான தமது தொலைபேசி உரையாடலின்போது, பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கைத் தமிழர்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருப்பதை தான் தெரிவித்தபோது, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் உரிய ஆலோசனை செய்யலாம் என ஒன்றிய அமைச்சர் கூறியதை நினைவுகூர்ந்துள்ளார்.


கடந்த 23-3-2022ஆம் தேதி கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களின் துயரநிலை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், மீனவர்கள் கைது தொடர்பான வழக்கினை விசாரித்த கிளிநொச்சி நீதிமன்றம், பிணையில் செல்ல ஒரு மீனவருக்கு இலங்கை ரூபாயில் 2 கோடி செலுத்திவிட்டு, தனிப்பட்ட பிணையில் ஜாமீனில் விடுவிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டதைக் குறிப்பிட்டும்,

மீனவர்களால் அவ்வளவு பெரிய பிணைத்தொகையைச் செலுத்த இயலாத காரணத்தினால், 12-5-2022 வரை அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விஷயத்தில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளைச்செய்து உறுதி செய்திடுமாறு' முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க:’நெருக்கடியிலிருந்து மீண்டு வர அயராமல் உழைத்து வருகிறோம்’ - மஹிந்த ராஜபக்சே

ABOUT THE AUTHOR

...view details