தமிழ்நாடு

tamil nadu

சுங்கச்சாவடி அமைக்க எதிர்த்து வழக்கு - அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

By

Published : Dec 25, 2021, 3:32 PM IST

கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு அருகே சுங்கச்சாவடி அமைப்பதை எதிர்த்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராஜன்குட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், கிருஷ்ணகிரி நகராட்சியிலிருந்து 4.3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரிய பனமுட்லு அருகே சுங்கச்சாவடி அமைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்துவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும், இந்த சுங்கச்சாவடி அமைந்தால் ஜெகதேவி, தொகரப்பள்ளி, ஜகுந்தம், போச்சம்பள்ளி, சாந்தூர், மாதூர், ஊத்தங்கரை, கல்லாவி, வேட்டையம்பட்டி, அஞ்சூர் போன்ற ஊர்களை சேர்ந்த வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாக நேரிடும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டுமென்றால் கூட சுங்கக்கட்டணம் செலுத்திதான் பெங்களூரு சாலையை பயன்படுத்தும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய பனமுட்லுவில் சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் சார்பில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி நீதிபதி ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒரு சுங்கச்சாவடி உள்ள நிலையில், அதிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் புதிய சுங்கச்சாவடி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலை கட்டண விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி நகராட்சி பகுதியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில்தான் சுங்கச்சாவடி அமைக்க வேண்டுமென்ற விதிகள் மீறப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு குறித்து மத்திய நெடுஞ்சாலைத் துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:Omicron in India: இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான் - தற்போதைய நிலை என்ன?

ABOUT THE AUTHOR

...view details