தமிழ்நாடு

tamil nadu

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு - நில நிர்வாக ஆணையர் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

By

Published : Oct 30, 2021, 10:50 PM IST

சுமார் 200 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரி, ஸ்ரீபெரும்புதூர் பாப்பான் சத்திரத்திலுள்ள காசிவிஸ்வநாதர், வேணுகோபால சுவாமி கோயில் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, தமிழ்நாடு நில நிர்வாக ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பாப்பான் சத்திரத்திலுள்ள காசிவிஸ்வநாதர், வேணுகோபால சுவாமி கோயிலுக்குச் சொந்தமாக இருங்கோட்டை, பழஞ்சூர் கிராமங்களில் 200 ஏக்கர் நிலம் உள்ளது.

கடந்த 1884ஆம் ஆண்டு உயில் மூலம் கோயிலுக்கு எழுதி வைக்கப்பட்ட இந்த நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரியும், நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்கக் கோரியும் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கோயிலுக்கு வழங்கப்பட்ட இந்த நிலம், அனாதீன நிலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வருவாய் ஆவணங்களில் அதை மாற்றி, கோயில் பெயருக்கு பட்டா வழங்கக் கோரி கோயில் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு நில நிர்வாக ஆணையர் முன் நிலுவையில் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை முடித்துவைத்த நீதிபதிகள்

அப்போது, கோயிலுக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலம் குயின்ஸ்லேண்ட் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்ததாகவும், குத்தகை முடிந்து விட்டதால், அந்த நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை நான்கு வாரங்களில் மீட்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நிதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கோயில் நிலத்தின் உரிமை தொடர்பாக அரசுக்கும், கோயில் நிர்வாகத்துக்கும் இடையிலான பிரச்சினை தொடர்பான மேல் முறையீடு, நில நிர்வாக ஆணையர் முன் நிலுவையில் உள்ளதால், இதுசம்பந்தமாக எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், கோயில் நிர்வாகத்தின் மேல் முறையீட்டு மனுவை மூன்று மாதங்களில் விசாரித்து முடிவெடுக்க நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு: நவ.01., தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details