தமிழ்நாடு

tamil nadu

'அவதூறு வழக்கிருந்து மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை விடுவிக்க இயலாது' -  உயர் நீதிமன்றம்

By

Published : Mar 7, 2022, 6:21 PM IST

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரம் தொடர்பாக, பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் இருந்து, மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவங்களில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புபடுத்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாகவும் அவரது பேச்சு சில ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அவதூறு வழக்கு

இந்த சம்பவத்தில் தொடர்ந்து தன்னை தொடர்புபடுத்தி உண்மைக்குப் புறம்பான தகவலை மு.க.ஸ்டாலின் பேசி வருவதால் ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு, பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். மேலும், மு.க.ஸ்டாலின் தன்னைப் பற்றி பேசுவதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் வி.சபரீசன் மற்றும் சில ஊடக நிறுவன ஆசிரியர்கள் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர்.

பதிலளிக்க உத்தரவு

இந்த நிலையில், பொள்ளாச்சி ஜெயராமன் தொடுத்த வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக்கோரி சபரீசன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (மார்ச் 7) விசாரணைக்கு வந்தது. சபரீசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக, தனியார் பத்திரிகையில் செய்தி வெளியானதற்கு சபரீசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இதில் அந்த பத்திரிகைக்கும், சபரீசனுக்கும் சம்பந்தமே இல்லாத நிலையில் சபரீசனை வழக்கில் இணைத்தது தவறு' என்றும் வாதிடப்பட்டது.

சபரீசன் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, அவதூறு வழக்கை எதிர்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும், பொள்ளாச்சி ஜெயராமனின் மனு தொடர்பாகப் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details