தமிழ்நாடு

tamil nadu

314 கோயில்களுக்கு BHOG தரச்சான்றிதழ் - அலுவலர்களை நேரில் பாராட்டிய முதலமைச்சர்

By

Published : Jan 24, 2022, 5:48 PM IST

தமிழ்நாட்டிலுள்ள 314 திருக்கோயில்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச்சான்றிதழ்கள் பெற்றுள்ளதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருக்கோயில் செயல் அலுவலர்களைப் பாராட்டினார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்

சென்னை: தமிழ்நாட்டில் 314 திருக்கோயில்கள், இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜன.24ஆம் தேதியான இன்று தலைமைச் செயலகத்தில் திருக்கோயில்களின் செயல் அலுவலர்களைப் பாராட்டும் விதமாக,

  • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
  • திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில்
  • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்
  • திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில்
  • திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்
  • சென்னை தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோயில்
  • சென்னை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில்
  • சென்னை கங்காதீஸ்வரர் கோயில்
  • திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில்
  • மகாபலிபுரம் சயன பெருமாள் திருக்கோயில்

ஆகிய திருக்கோயில்களின் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்களை வாழ்த்தியுள்ளார்.

ரூ.76 கோடி ஒதுக்கீடு

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம், தற்போது 754 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவற்றில்

  • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
  • ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
  • சமயபுரம் மாரியம்மன் கோயில்
  • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்

ஆகியவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.76 கோடி செலவில் 754 திருக்கோயில்களுக்கு நாள் ஒன்றுக்கு 70,000 பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனம்

இந்தியா முழுவதும் இந்திய அரசின் உணவுப்பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், உணவு தயாரிக்கும் நிறுவனங்களில் உணவுகளைப் பரிசோதித்து தரச்சான்றிதழ் வழங்கும் பணியினை செய்து வருகிறது.

இந்நிறுவனம் மத வழிபாட்டுத் தலங்களில் தயாரிக்கப்பட்டு இறைவனுக்குப் படைக்கப்படும் பிரசாத வகைகளைப் பரிசோதித்து, கடவுளுக்குச் சுத்தமான சுகாதாரமான பிரசாதம் படைத்தல் (BHOG-Blissful Hygienic Offering to God) என்னும் சான்றிதழ்களை வழங்கி வருகிறது.

இதனடிப்படையில் இந்தியா முழுவதிலும் 394 மத வழிபாட்டுத் தலங்களுக்கு மட்டுமே இச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

அவற்றுள் 314 திருக்கோயில்கள் இடம்பெற்று சுகாதாரமான உணவளிக்கும் திருக்கோயில்களைக் கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது, தமிழ்நாடு.

இதை தமிழ்நாடு அரசும் உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க: பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமரின் புகைப்படத்தை மாட்டிய பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

TAGGED:

Chennai News

ABOUT THE AUTHOR

...view details