தமிழ்நாடு

tamil nadu

10% இட ஒதுக்கீடு: அண்ணா பல்கலை.க்கு நீதிமன்றம் கண்டனம்!

By

Published : Mar 10, 2021, 5:14 PM IST

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு ஏற்காத நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் எம்.டெக். படிப்பிற்கு ஏன் அமல்படுத்தியது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

10 சதவீத இட ஒதுக்கீடு: அண்ணா பல்கலை.க்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!
10 சதவீத இட ஒதுக்கீடு: அண்ணா பல்கலை.க்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பயோடெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை எதிர்த்து இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பத்திருந்த சித்ரா உள்ளிட்ட மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

தமிழ்நாடு அரசின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு முறைக்குப் பதில், மத்திய அரசின் 49.5 விழுக்காடு இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020-2021ஆம் ஆண்டில் இரு மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, மாணவர்கள் நலனைக் கருத்தில்கொண்டும், படிப்பு ரத்து செய்யப்படக்கூடாது என்பதாலும் இந்தாண்டு மத்திய அரசின் இடஒதுக்கீட்டைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (மார்ச் 10) நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் முன்னிலையான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், மாநில அரசின் கீழ் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைகழகத்தில், தமிழ்நாடு அரசு ஒப்புதல் இல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதாக முறையிட்டார்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசின் வேலைவாய்ப்புக்கும் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அந்தச் சான்றிதழ் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகம் எவ்வாறு செய்ய முடியும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, 49.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற நீதிமன்றம் அனுமதித்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு ஏன் அமல்படுத்தப்பட்டது? எனக் கேள்வி எழுப்பினார்.

நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அப்படியே பின்பற்றாமல், தங்களின் வசதிக்கு ஏற்ப மாற்றிச் செயல்படுத்த விரும்பினால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதி, அண்ணா பல்கலைக்கழகமும், மத்திய அரசும் இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை மறுதினத்திற்கு (மார்ச் 12) ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க...பரப்புரைக்கு சரக்கு வாகனத்தில் மக்களை ஏற்றிவந்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து

ABOUT THE AUTHOR

...view details