தமிழ்நாடு

tamil nadu

TN Rains: சவாலை சமாளிக்க அரசு தயார் - கேகேஎஸ்எஸ்ஆர்

By

Published : Nov 27, 2021, 6:23 AM IST

தென் மாவட்டங்களில் தற்போது எந்தச் சவாலும் இல்லை எனவும், சவாலை சமாளிக்க அரசு தயாராக உள்ளது என்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர், minister kkssr ramachandran, chennai rains, TN Rains, TN Flood, TN Disaster Management, Disaster Management minister
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

சென்னை: சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளரைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை சென்னை, டெல்டா பகுதிகளில் கொட்டித் தீர்த்தது. இதுவரை இல்லாத அளவு தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் (நவம்பர் 25) மழை பெய்துள்ளது. தூத்துக்குடியில் இதுவரை இல்லாத அளவில் கன மழை பெய்துள்ளது. இது குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய வசதியாக இருக்கும்.

முதலமைச்சர் ஆலோசனை

இது தொடர்பான மாவட்ட ஆட்சியர்களுக்கு, மாவட்டங்களில் உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் கடந்த நவம்பர் 24ஆம் தேதி ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும், வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட சேத விவரங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்பி நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

மாஞ்சோலை பகுதியில் 20 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் பாபநாசம் அணை நிரம்பியுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் இருக்கக்கூடிய மக்களுக்கு வெள்ள இடர் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 109 முகாம்களில் ஒன்பதாயிரத்து 903 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் 14 முகாம்களில் 639 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஒன்றும் செய்யவில்லை

வீடுகளை காலிசெய்து முகாம்களில் உள்ளவர்களின் வீடுகளுக்கு காவல் துறை மூலம் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடம் இரண்டு தவணைகளாக மொத்தம் 4,626.80 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் உள்ள தரைப் பாலங்களைக் கணக்கிட்டுவருகிறோம். ஏரி, குளங்கள், கண்மாய்கள், கரைகள் வலுவாகவே உள்ளது. நீர்த் தேக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றன.

10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அதிமுக மழைநீர் தேங்காமல் இருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து உடனடியாக நீர் அகற்றப்படுகிறது. மழையால் தமிழ்நாட்டில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையின் காரணமாக சாலைப் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வேளாண் பொருள்களைச் சந்தைக்கு கொண்டுசெல்வதிலும் பிரச்சினை இல்லை.

தென் மாவட்டங்களில் தற்போது எந்தச் சவாலும் இல்லை. சவாலைச் சமாளிக்க அரசு தயாராக உள்ளது. தூத்துக்குடியில் 14 நிவாரண முகாம்களில் 639 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வேலூரில் 35 முகாம்களில் மூன்றாயிரத்து 916 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details