தமிழ்நாடு

tamil nadu

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்க, திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு!

By

Published : Apr 25, 2022, 8:52 PM IST

திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இந்த ஆண்டு ரூபாய் 5 கோடி அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வனத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி
ஈடிவி பாரத் செய்தி எதிரொலி

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று வனத்துறை (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம்), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில், அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், சி.வீ.மெய்யநாதன் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். அதில் வனத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்பு வெளியிடப்பட்டன. அவை பின்வருமாறு:

1. திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்தை புதிய பறவைகள் சரணாலயமாக மாற்ற 7.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

2. கிராமந்தோறும் மரகத பூஞ்சோலைகள் 100 ஹெக்டேர் பரப்பளவில் ரூபாய் 25 கோடி செலவில் உருவாக்கப்படும்.

3. காவிரி தெற்கு வன உயிரின சரணாலயத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

4. திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, இந்த ஆண்டு ரூபாய் 5 கோடி அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

5. தமிழ்நாடு அரசு வனத்துறையின் முன்னோடி முயற்சியாக, கள ஊழியர்களின் பயன்பாட்டிற்காக ரூபாய் 2.32 கோடி செலவில் 256 மின்சார இரு சக்கர வாகனங்களை கொள்முதல் செய்து வழங்க உள்ளது.

6. மன்னார் வளைகுடாவில் 3.6 ஹெக்டர் பரப்பளவில் பவளப் பாறைகளின் மீளுருவாக்கப் பணிக்காக 3.6 கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சி, கண்காணிப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் அரசால் மேற்கொள்ளப்படும்.

7. சென்னையில் ரூபாய் 6.3 கோடி செலவில் சர்வதேச ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்.

8. அடையாறு கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் கரைகளில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 3.42 கோடி மரக்கன்றுகள் ரூபாய் 237 கோடி செலவில் பசுமைத்தோட்டங்கள் ஏற்படுத்தப்படும்.

9. சூழல் சுற்றுலா தலங்கள் புதிதாக, ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு முகமை மற்றும் தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் ரூபாய் 14 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

10. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உயிர்ப்பன்மை ஆய்வகம் மற்றும் சுற்றுலா மையம் ரூபாய் 3.6 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

11. வனப்பகுதியில் உள்ள அந்நிய களைத்தாவர இனங்கள் அகற்ற இந்த ஆண்டிற்கு ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

12. வனத்துறையின் மேலாண்மையை செயல்பாடுகள் மற்றும் சேவைகளில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்.

13. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் சோலைகாடுகள் பாதுகாப்பு மையம் சுமார் 116 ஹெக்டர் பரப்பளவு, ரூ. 5.2 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது.’ என பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் வன உயிரியான தேவாங்கு குறித்து, அழிவின் விளிம்பில் தேவாங்கு இனம்... எப்படி பாதுகாப்பது...? வழி இருக்கிறதா என்னும் தலைப்பில், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தில் செய்திக்கட்டுரை வெளியிடப்பட்டது. அப்போது, இக்கட்டுரை பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் அரசின் வனத்துறை மானியக்கோரிக்கை மீதான அறிவிப்பில், அழிவின் விளிம்பில் இருக்கும் தேவாங்கு இனத்தைப் பாதுகாக்க இரண்டு இடங்களில் சரணாலயம் அமைக்க, திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையதளத்தில் வெளியான செய்தி எதிரொலியாக, அரசு ஒரு நல்ல விஷயத்தை முன்னெடுத்துள்ளது.



இதையும் படிங்க:அழிவின் விளிம்பில் தேவாங்கு இனம்..! எப்படி பாதுகாப்பது..? வழி இருக்கிறதா..?

ABOUT THE AUTHOR

...view details