சென்னை:Late Tamil Director SP Jananathan's statue Ceremony: மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் முழு உருவச் சிலை திறப்பு விழா மற்றும் 'சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி' எனும் ஜனநாதன் குறித்த நினைவு மலர் வெளியீட்டு விழா, சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் மன்றத்தில் நடைபெற்றது.
இதில் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர்கள் அமீர், வ.கௌதமன், கரு.பழனியப்பன், சுசீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத் தலைவர் சங்கரய்யா ஆகியோர் காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்றுப் பேசினர்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய்சேதுபதி,
'நான் கம்யூனிசம் படித்ததில்லை. அது பற்றிய அறிவு எனக்கு அதிகம் கிடையாது. கம்யூனிசத்தை செயல் மூலமும், வாழ்ந்தும் காட்டியவர் ஜனநாதன். கம்யூனிசம், பெரியாரியத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், அதைப் பின்பற்றி வாழும்போதுதான் அதன் மீது பிடிப்பு ஏற்படும்.
ஜனநாதன் படங்களில் வார்த்தைகளைப் பார்த்து பார்த்து விதைப்பார், ஆயிரம் வார்த்தையை 5 வார்த்தையில் அடக்குவார். என் வாழ்வில் நான் செய்த புண்ணியம் அவரது கடைசிப் படத்தை தயாரித்தது, சாபம் அது கடைசிப் படமாக அமைந்தது' என்றார்.
தொடர்ந்து திருமாவளவன் பேசுகையில்,
'சினிமா என்பது வணிக நோக்கம் கொண்டது. திரைத்துறையில் தத்துவத்தை பேசுவது மிகவும் கடினமானது. கடினமான இடத்திலும் வெற்றிகரமாக தத்துவங்களைப் பேசியவர் ஜனநாதன்.
இன்னும் 10 ஆண்டுகாலம் வாழ்ந்திருந்தால் இந்தியளவில் கம்யூனிசம் குறித்து திரைப்படங்கள் அதிகம் கொடுத்துச் சென்றிருப்பார்.
கொள்கை, தத்துவம் என்பது வேறு வேறு. இரண்டை சார்ந்தும் அரசியல் இயக்கங்கள் இயங்குகின்றன. இட ஒதுக்கீடு என்பது கொள்கை, சமூகநீதி என்பது கோட்பாடு. மொழி உரிமை என்பது கொள்கை, தமிழ்த் தேசியம் என்பது கோட்பாடு.
கம்யூனிசத்தைப் பேசியவர் ஜனநாதன்
தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி கம்யூனிஸ்ட் கட்சி, அதை திரைமொழியில் பேச அதிகம் அறிவாற்றல் வேண்டும். கட்சிகளை அடையாளப்படுத்தாமல் தத்துவத்தை பேசினார், ஜனநாதன்.
படங்களில் 4 குத்தாட்டம், சண்டை, காதல் காட்சி, கவர்ச்சிகரமான கதாநாயகன் கதாநாயகி, பஞ்ச் வசனம் இருக்க வேண்டும் என இயக்குநர், தயாரிப்பாளர்கள் நினைப்பார்கள். இது குறித்து யோசிக்காமல் சர்வதேச அரசியல், பொருளாதாரம், மருந்து உற்பத்தி குறித்து படங்களில் பேசியவர் ஜனநாதன். கரோனா திட்டமிட்ட சதி என முன்கூட்டியே கண்டறிந்து கூறியவர்.
கம்யூனிஸ்ட்கள் மட்டுமே சர்வதேச பார்வைகளுடன் பிரச்னைகளை அணுகுவர். இந்தப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டவர், ஜனநாதான்.
இங்கு திறக்கப்பட்ட ஜனநாதன் சிலையை அரசே ஏற்று பொது இடத்தில் வைக்க வேண்டும் என கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாக விஜய் சேதுபதி கூறினார். அனைத்துக் கட்சியினரும் இதை நிறைவேற்ற முன்வர வேண்டும்’ என்றார்.