தமிழ்நாடு

tamil nadu

சேர்ந்து உழைப்போம் - முன்களப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் ட்வீட்

By

Published : Nov 11, 2021, 9:04 PM IST

சென்னையை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டு வர, முன்களப் பணியாளர்களும் அரசும் இணைந்து பணியாற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

cm Stalin thanked frontline workers who worked in rain relief, முன்களப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் ட்வீட்
cm Stalin thanked frontline workers who worked in rain relief

சென்னை:வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை மாநகரையே புரட்டிப்போட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சுரங்கப்பாதைகளில் மழை நீர் அதிகளவில் தேங்கியுள்ளதால், 11 சுரங்கப்பாதைகள், ஏழு சாலைகளில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சில மணிநேரங்கள் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதனால், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவது, பலத்த காற்றில் சரிந்துவிழுந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றுவது, நிவாரணப் பணிகளை மேற்கொள்வது என அரசுத் துறையினர் முழு வேகத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

நன்றி தெரிவித்து ட்விட்

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள நிவாரணத்தை மேற்கொண்டு வரும் காவல் துறையினர், மின் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத்துறையினர் ஆகியோரின் சேவைக்கு நன்றி தெரிவித்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில்," தொடர் மழை - அளவுக்கதிகமான நீர்வரத்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது துயர்துடைக்கப் பணியாற்றும் காவல்துறையினர், மின்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன்.

கரையைக் கடந்தது

தன்னலம் பாராத உங்களது சேவையாலும் தியாகத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் துயர் துடைக்கப்படுகிறது. இயல்பு நிலை முழுமையாக விரைந்து திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம், மக்களைக் காப்போம்.

உங்கள் தியாகம் விலைமதிப்பில்லாதது; உங்கள் சேவை மகத்தானது; உங்கள் உள்ளத்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, மரம் சாய்ந்து மயக்கமடைந்த நபரை உரிய நேரத்தில் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய அண்ணா நகர் ஆய்வாளர் ராஜேஸ்வரி, மின் கம்பங்களை சீர்செய்பவர்கள், கனமழையில் அர்பணிப்புடன் பணியாற்றும் காவலர்கள், தூய்மைப் பணியாளர்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலை 5.15 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிலையில், இரவு 7.45 மணியளவில் முழுவதுமாக கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: வெள்ளத்தில் மிதக்கும் சென்னையும்... மீட்புப் பணிகளும்...

ABOUT THE AUTHOR

...view details