தமிழ்நாடு

tamil nadu

தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

By

Published : Dec 2, 2021, 2:03 PM IST

Updated : Dec 2, 2021, 3:15 PM IST

தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 2) மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

CHENNAI regional meteorological centre , சென்னை வானிலை ஆய்வு மையம்
CHENNAI regional meteorological centre

சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை (டிசம்பர் 3) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 4 நிலவரம்

மத்திய வங்கக் கடல், அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவவுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

டிசம்பர் 5 நிலவரம்

நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்

டிசம்பர் 6 நிலவரம்

நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

புயல் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, மேற்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். இது மேலும் வடமேற்குத் திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கரையை வரும் 4ஆம் தேதி காலை நெருங்கக் கூடும். இதன் காரணமாக,

டிசம்பர் 2ஆம் தேதி: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி, அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 3, 4ஆம் தேதிகளில்: மத்திய வங்கக் கடல் பகுதி, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 5ஆம் தேதி: மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: புதிய புயல் முன்னெச்சரிக்கை: மத்திய அரசு அவசர ஆலோசனை

Last Updated : Dec 2, 2021, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details