தமிழ்நாடு

tamil nadu

கடலூரில் கிராமசபை கூட்டம் நடத்தக் கோரிய வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

By

Published : Sep 20, 2021, 6:11 PM IST

கடலூரில் கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை:தமிழ்நாடு முழுவதும் வரும் அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் விருதாசலம் ஒன்றியம், ராஜேந்திரபட்டினம் கிராம ஊராட்சித் தலைவர் சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

அதில், 'கிராம சபைக் கூட்டத்தை நடத்த அனுமதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து இருந்தோம். ஆனால், மாவட்ட ஆட்சியர் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டார். கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு ஊராட்சித் தலைவருக்குதான் அதிகாரம் உள்ளது. எனவே, கிராம சபைக் கூட்டத்தை நடத்த அரசு உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு இன்று (செப்.20) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், 'கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி, ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக்கூடிய ஒன்பது மாவட்டங்களைத் தவிர, தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபை நடத்தப்படும்.

அதற்கான அரசாணையை அரசு தரப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகசைலா கூறுகையில், 'கிராமசபைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம் ஊராட்சிமன்றத் தலைவருக்கே உள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

தற்போது ஊராட்சிகளின் ஆய்வாளராகவுள்ள மாவட்ட ஆட்சியர் விருப்பத்தின்படியே கிராமசபை நடப்பது போன்ற சூழலை உருவாக்கியிருப்பது, சட்டத்திற்குப் புறம்பானது' என்றார்.

இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், 'இது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: கிராமசபை கூட்டத்தை ரத்து செய்தது சட்ட விரோதம்: சமூக ஆர்வலர்

ABOUT THE AUTHOR

...view details