தமிழ்நாடு

tamil nadu

முன்னாள் காதலனுடன் பேசியதால் காதலியை கொன்ற காதலன் கைது...

By

Published : Jul 24, 2022, 9:38 AM IST

சென்னையில் முன்னாள் காதலனுடன் பேசியதால் காதலியை கொலை செய்துவிட்டு தற்கொலை என்று நாடகமாடிய காதலன் கைது செய்யப்பட்டார்.

காதலியை கொலை செய்துவிட்டு தற்கொலை என்று நாடகமாடிய காதலன் கைது
காதலியை கொலை செய்துவிட்டு தற்கொலை என்று நாடகமாடிய காதலன் கைது

சென்னை: தஞ்சாவூர் பேராவூரணி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா (23). இவருக்கும் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(20) என்பவக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருவரும் பணியாற்றி வந்தபோது மீண்டும் சந்திப்பு ஏற்பட்டு நட்பு காதலாக மாறியுள்ளது. பின்னர், இருவரும் ஒரே வீட்டில் தங்க முடிவு செய்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு சிறிய வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் இருவரையும் கண்டு சந்தேகப்பட இருவரும் அக்கா, தம்பி என்றும் வீட்டில் வறுமை என்பதால் சென்னைக்கு வேலை தேடி வந்ததாகவும் கூறி வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர்.

இந்த சூழலில், நேற்று (ஜூலை 23) காலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட சந்தோஷ், வீட்டில் ஒன்றாக வசித்து வந்த மஞ்சுளா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும் வழக்கறிஞர் மூலம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து, சந்தோஷை வீட்டிற்கு அழைத்து சென்ற போலீசார் கதவை திறந்து பார்த்தபோது இளம் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளார் என்பது தெரியவந்தது. சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர் உடலை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

பின்னர், சந்தோஷை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் மஞ்சுளாவை சந்தோஷே கொலை செய்து, மஞ்சுளா தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசாரின் தொடர் விசாரணையில் மஞ்சுளா மற்றும் சந்தோஷ் ஆகியோர் தஞ்சாவூர் பகுதியில் ஒன்றாக பணிபுரிந்து வந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளதும், அதன் பின்னர் இருவரும் 4 மாதங்களுக்கு முன் சென்னைக்கு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிந்தாதிரிப்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து பின் மஞ்சுளா கோயம்பேட்டில் உள்ள தனியார் கால் சென்டரில் பணிபுரிந்து வந்ததும், சந்தோஷ் நூல் நெசவு கம்பெனியில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ் தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனால் சந்தோஷ் மற்றும் மஞ்சுளா ஆகிய இருவருக்கு இடையிலும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மனமுடைந்த மஞ்சுளா பெங்களூரில் பணிபுரியும் முன்னாள் காதலனிடம் இதுகுறித்து கூறி கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

மேலும், மஞ்சுளாவை பெங்களூருக்கு வருமாறு அவரது முன்னாள் காதலன் அழைத்ததாகவும் கூறப்படுகிறது. மஞ்சுளா முன்னாள் காதலனிடம் செல்போனில் பேசுவதை அறிந்த சந்தோஷ், குடித்துவிட்டு தினமும் மஞ்சுளாவை தாக்கியுள்ளார். மேலும், கடந்த சில தினங்களாக வீட்டு செலவுக்கு சந்தோஷ் பணம் கொடுக்காமல் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், குடிபோதையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ், வீட்டில் மஞ்சுளா சமைக்காததால் சண்டை போட்டுள்ளார். இந்த சண்டை பெரிதாக சந்தோஷ், மஞ்சுளாவை கொலை செய்து, பின் துப்பட்டாவால் மின்விசிறியில் மாட்டி தொங்க விட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மஞ்சுளாவை கொலை செய்த பின் பயந்து போன சந்தோஷ் அங்கிருந்து நேராக ஸ்ரீபெரும்புதூருக்கு சென்று பெண் வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து நடந்தவற்றை கூறியுள்ளார். மேலும், நேற்று காலை காவல் கட்டுப்பாட்டறைக்கு கால் செய்து தன்னுடன் தங்கி இருந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடியுள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, சந்தோஷை கைது செய்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் ரூ.1 கோடி மதிப்பிலான ரத்தின கற்கள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details