தமிழ்நாடு

tamil nadu

பாசிச பாஜக ஆட்சியை அதள பாதாளத்தில் வீழ்த்துவோம் - திமுக கூட்டணி தலைவர்கள் சூளுரை

By

Published : Mar 7, 2021, 8:14 AM IST

Updated : Mar 7, 2021, 12:11 PM IST

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் ஜமாஅத் பிரதிநிதிகள் சார்பாக பாசிச எதிர்ப்பு - மதநல்லிணக்க மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள்.

Thirumavalavan speech, விசிக தலைவர் திருமாவளவன் உரை, anti facist religious reconcilation confrence in chennai, Chennai latest, Chennai, சென்னை, பாசிச எதிர்ப்பு - மதநல்லிணக்க மாநாடு, சென்னை மாவட்டச்செய்திகள்
anti-fascist-religious-reconciliation-conference-in-chennai

தமிழ்நாடு முஸ்லிம் ஜமாஅத் பிரதிநிதிகள் சார்பில் நடைபெற்ற இந்த பாசிச எதிர்ப்பு - மதநல்லிணக்க மாநாட்டில் திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வீரபாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்த நிகழ்வில் பேசிய கே.எஸ்.அழகிரி, "இந்தியா போன்ற நாட்டை மத நல்லிணக்க நாடாக மாற்ற வேண்டும் என போராடுகிறோம். ஜெர்மனி போன்ற நாடுகளில் ஒரே மொழி இருப்பதால் அங்கு மொழி, இன பிரச்னை வர வாய்ப்பில்லை. ஆனால் இந்தியா அப்படி இல்லாமல் பல நாடுகளின் சங்கமமாக உள்ளது.

இங்கு வாழும் மக்களை ஒற்றுமைப்படுத்த ஜவஹர்லால் நேரு மொழிவாரியாக மாநிலங்களை பிரித்தார். மோடி ஒரே நாடு என்கிறார். இந்தியா ஒரே நாடு அல்ல, பல நாடுகளின் கூட்டமைப்பு, பல மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் கூட்டமைப்பு.

இந்தியாவின் சிறப்பம்சம் வேற்றுமையில் ஒற்றுமை, அதனை நாம் பின்பற்றுகிறோம். இதனை மாற்ற பாஜக போராடுகிறது. பாசிச எதிர்ப்பை பரவலாக்க வேண்டும்" என்று கூறினார்.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா பேசுகையில், "குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டு வர காரணம், அதிமுகதான். பாஜகவை எதிர்க்க கூடிய அணியாக திமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அணி திகழ்கிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும்.

இடஒதுக்கீடு என்பதே பாஜகவின் கொள்கையில் கிடையாது. திமுக தலைமையிலான கூட்டணி 200க்கும் மேற்ப்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, பாசிச பாஜக ஆட்சியை அதள பாதாளத்தில் வீழ்த்துவோம்" என்றார்.


திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:

"போர் நெருங்கி விட்டது. ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் நாம் சிலருக்கு முடிவு கட்ட வேண்டும். அப்போதுதான் நாடு விடுதலை அடையும்.

நாட்டின் பிரிவினையின்போது இந்த நாட்டில் நாங்கள் வாழ முடியாது என்று ஜின்னா கூறினார். அப்போது 'நாங்களெல்லாம் இந்தியர்கள், இந்தியாதான் எங்கள் நாடு' என்று காயிதே மில்லத் இஸ்மாயில் கூறினார்.

உணவு, மதச் சுதந்திரத்தில் தலையிடுவது அரசின் வேலை இல்லை. சமூகம், பொருளாதார பாதுகாப்பை உருவாக்குவதே அரசின் திட்டமாக இருக்க வேண்டும், தற்போதைய அரசு அதனை செய்யவில்லை.

சிறுபான்மையினரை கொடுமைப்படுத்தி, அவர்களை புறகணிக்கின்ற அரசுதான் இங்கு நடந்துக் கொண்டிருக்கிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் அடிமைகளை அப்புறப்படுத்துவதுதான் வேலை. நமது தோழமை கட்சியினர் அனைவரும் இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பவர்கள்" என்றார்.

கே.எஸ்.அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் இஸ்லாமிய தலைவர்களுக்கு சமூக நல்லிணக்க விருதுகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் பணி காரணமாக அவர்கள் பங்கேற்கவில்லை.


இதையும் படிங்க:மதிமுகவுக்கு 6 தொகுதிகள் - உதயசூரியன் சின்னத்தில் போட்டி!

Last Updated : Mar 7, 2021, 12:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details