ஹைதராபாத்: பொதுவாக எதிர்காலத்திற்காக முதலீடு செய்பவர்கள், நீண்ட கால நிதித் தேவைகளை கருத்தில் கொண்டே முதலீடு செய்கின்றனர். அதேநேரம் குறுகிய கால நிதித் தேவைகள் இருந்தாலும், அதற்கு ஏற்ற முதலீட்டுத் திட்டங்களை தேர்வு செய்வதில் பலருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. அதேபோல், எதிர்பாராதவிதமாக கிடைக்கும் வருவாயை ஓரிரு ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கும் வகையிலான லாபகரமான முதலீட்டுத் திட்டங்களையே பலரும் எதிர்நோக்குகின்றனர். இதுபோன்ற சூழலில், லிக்விட் ஈடிஎஃப்(ETF - Exchange Traded Fund) முதலீடுகள் சிறந்த தேர்வாக இருக்கும் என்று தெரிகிறது.
இதுகுறித்து நிதி முதலீடுகள் நிபுணர் சிந்தன் ஹரியா கூறும்போது, "குறுகிய காலத் தேவைகளுக்காக அல்லது ஒரு சில வருடங்களுக்கு பணத்தை முதலீடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். இந்தச் சூழலில், எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்க அனுமதிக்கும் திட்டங்களையே நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில், லிக்விட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் முதலீடுகள் (Liquid ETF) பொருத்தமான முதலீட்டுத் திட்டமாக இருக்கும்.
லிக்விட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் ஆனது தங்கம், பத்திரங்கள் உள்ளிட்ட குறைந்த ஆபத்து கொண்ட பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றன. எனவே, மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது லிக்விட் ஈடிஎஃப் முதலீடுகள் ஓரளவு பாதுகாப்பானவை. இவற்றை தேவைப்படும்போது உடனடியாக பணமாக மாற்றிக் கொள்ள முடியும். வழக்கமான முதலீட்டுத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, சற்று அதிக லாபத்தை தரக்கூடியவை.