தமிழ்நாடு

tamil nadu

அப்பா, அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்: மணமகள் தற்கொலைக்குப் பின்னால் வரதட்சணை வதம்.!

By

Published : Aug 15, 2023, 6:36 AM IST

உத்திர பிரதேசத்தில் திருமணத்திற்கு 20 நாட்கள் முன்பு ரூ.30 லட்சம் பணம் மற்றும் கார் உள்ளிட்ட தனது வரதட்சணை கோரிக்கை நிறைவேறாததால் மணமகன் திருமணத்தை நிறுத்தியதை அடுத்து மணமகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

உத்தரப் பிரதேசம்: படவுன் பகுதி அருகே கடைசி நேரத்தில் மணமகன் கேட்ட வரதட்சணையைக் கொடுக்க முடியாத சூழலில் இருந்த பெண் வீட்டார், இது குறித்து மணமகனிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மணமகன் திருமணத்தை நிறுத்திய நிலையில் மனம் உடைந்த மணமகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்கொலைக்கு முன்பு மணமகள் தனது செல் தொலைப்பேசியில் வீடியோ ஒன்றை எடுத்து அதைத் தனது சமூக வலைதளப்பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

அதில் "அப்பா, அம்மா என்னை மன்னித்துவிடுங்கள், சமூகத்தால் நான் மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி விட்டேன், குடும்பத்தின் இயலாமையை நினைத்து மிகவும் கவலைப்படுகிறேன், விகாஷ் எனக்கு வேறு வழி தெரியவில்லை" எனக்கூறியுள்ளார். இந்த சம்பவம் உகைட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரியமாய் கிராமத்தில் இன்று (14.08.2023) நடந்துள்ளது.

ஜக்பீர் சிங் என்பவரது மகள் சப்னா. இவருக்கும் வஜிர்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகோல் கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுக் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்துள்ளது.

ஆனால் திருமணத்திற்கும் 20 நாட்களுக்கு முன்பு அரசு அதிகாரியான மணமகன் விகாஷ், பெண் வீட்டாருக்குச் செல் தொலைப்பேசி மூலம் அழைப்பு விடுத்து தனக்கு 30 லட்சம் ரூபாய் பணமும், காரும் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். கடைசி நேரத்தில் அவ்வளவு பெரிய தொகை கேட்டால் நாங்கள் எங்குச் செல்வது என மணமகளின் வீட்டார் மணமகனிடம் கூறியதாகத் தெரிகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். திருமணம் தடைப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையில் கடும் மன உளைச்சலில் இருந்த மணமகள் இன்று திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்பு இரண்டு வீடியோக்களை எடுத்து அதைத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள மணமகள், முதல் வீடியோவில், திருமணத்திற்கான அழைப்பிதழ்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்ட நிலையில் திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வந்ததாகக் கூறியுள்ளார்.

ஆனால் மணமகனின் குடும்பத்தினர் கடைசி நேரத்தில் வரதட்சணையைக் கூட்டிக்கொண்டே போனதாகவும், திடீரென ஏப்ரல் 2ஆம் தேதி மணமகன் விகாஷ் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து தங்களால் தாங்க முடியாத அளவுக்கு வரதட்சணை கேட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தங்களின் இயலாமை குறித்து விகாஷிடம் விளக்க முயற்சித்தும் அவர் பிடிவாதமாகப் பேசி மனரீதியாகத் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து மணமகள் சப்னா தற்கொலைக்குச் சற்று முன்பு எடுத்த வீடியோ ஒன்றில், தன் மீது எந்த தவறும் இன்றி மணமகனால் தான் நிராகரிக்கப்பட்டதாகக் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.

அவர் என்னை நிராகரித்ததால் சமூகம் தன்னை இழிவுபடுத்துவதாக வேதனை தெரிவித்த மணமகள் சப்னா, தன்னால் இந்த வேதனையைத் தங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் கடந்த நான்கு மாதங்களாகத் தனது இந்த சூழ்நிலையைச் சமாளிக்க முயற்சி செய்த நிலையில் தன்னால் அது முடியவில்லை எனவும் அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள்.

விகாஷ் எனக்கு வேறு வழி தெரியவில்லை எனக்கூறியுள்ளார். இது குறித்து மணப்பெண்ணின் தந்தை ஜக்பீர் சிங் கூறுகையில், திருமணத்திற்கு முன்பு மணமகன் விகாஷ் 30 லட்சம் ரூபாய் பணமும், காரும் வரதட்சணையாக வேண்டும் எனக் கேட்டதாகவும், தங்களின் இயலாமை குறித்து அவரிடம் கூறியபோது திருமணத்தை நிறுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தனது மகளின் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:சுதந்திர தின விழாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி.. பாக். தொடர்பு பயங்கரவாதிகள் 5 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details