தமிழ்நாடு

tamil nadu

ரூ.7 லட்சம் கோடிக்கும் மேலான பொதுக்கடனில் தமிழ்நாடு - மத்திய அரசின் தரவுகள் கூறுவது என்ன?

By

Published : Jul 25, 2023, 7:12 AM IST

Updated : Jul 25, 2023, 7:58 AM IST

நாட்டிலேயே கடந்த மூன்று நிதியாண்டுகளில் கடனைக் குறைத்த ஒரே மாநிலமாக ஒடிசா விளங்குகிறது. ஒடிசா மாநிலம் 2019-20ஆம் நிதியாண்டில், 1.8 சதவீதமும், 2020-21ல் 8.4 சதவீதமும், 2022-23 நிதியாண்டில் 12 சதவீதமும் என பொதுக்கடன் விகிதத்தை குறைத்து உள்ளன.

தமிழ்நாடு, உ.பி.,மாநிலங்களின் பொதுக்கடன் தலா ரூ.7 லட்சம் கோடிக்கும் மேல் : மத்திய அரசின் தரவுகள் சொல்வது என்ன!
தமிழ்நாடு, உ.பி.,மாநிலங்களின் பொதுக்கடன் தலா ரூ.7 லட்சம் கோடிக்கும் மேல் : மத்திய அரசின் தரவுகள் சொல்வது என்ன!

டெல்லி:2022 - 2023ஆம் நிதியாண்டில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொத்த நிலுவைத் தொகைகள் அல்லது மொத்தக் கடன்கள், புதிய சாதனை உச்சத்தை தொட்டு உள்ளன. மத்திய அரசு வெளியிட்டு உள்ள சமீபத்திய அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, நாட்டிலேயே தமிழ்நாடு அதிகக் கடனைக் கொண்ட மாநிலமாக உள்ளது தெரிய வந்து உள்ளது.

இது கடந்த நிதியாண்டின் நிதிநிலை மதிப்பீட்டின்படி, ரூ.7.53 லட்சம் கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து, இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசம், அதே நிதியாண்டில் ரூ.7.1 லட்சம் கோடி அளவிற்கு கடனைக் கொண்டு உள்ளது.

மகாராஷ்டிரா (ரூ.6.8 லட்சம் கோடி), மேற்கு வங்கம் (ரூ.6.08 லட்சம் கோடி), ராஜஸ்தான் (ரூ.5.37 லட்சம் கோடி), கர்நாடகா (ரூ.5.35 லட்சம் கோடி), ஆந்திரப் பிரதேசம் (ரூ.4.42 லட்சம் கோடி), குஜராத் (4.23 லட்சம் கோடி ரூபாய்), கேரளா (ரூ.3.8 லட்சம் கோடி), மத்தியப்பிரதேசம் (ரூ.3.8 லட்சம் கோடி), மத்தியப்பிரதேசம் (ரூ.3.91 லட்சம் கோடி), அதிக கடனில் உள்ள மற்ற முக்கிய மாநிலங்கள் வரிசையில், பஞ்சாப் (ரூ.3.05 லட்சம் கோடி), ஹரியானா (ரூ.2.87 லட்சம் கோடி), பீகார் (ரூ. 2.86 லட்சம் கோடி) உள்ளன.

மக்களவையில், நேற்று (ஜூலை 24) எம்பி ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, “நாட்டின் அனைத்து மாநிலங்களும் தங்கள் சொந்த நிதி பொறுப்பு மற்றும் நிதிநிலை மேலாண்மை சட்டங்களை இயற்றி உள்ளன. அந்தந்த மாநிலத்தின் FRBM சட்டத்திற்கு இணங்குவது, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் கடன்களை கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள், அந்தந்த மாநில சட்டப்பேரவைகளால் கண்காணிக்கப்படுகிறது. மேலும், கடந்த ஐந்து நிதியாண்டுகளில் எந்த ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியும் எந்த ஒரு மாநில அரசுக்கும் கடன் வழங்கவில்லை” என தெரிவித்து உள்ளார்.

சில மாநிலங்கள் தங்கள் நிதியை நிர்வகிப்பதில், மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருவதையும், நிலுவையில் உள்ள கடன்களைக் குறைக்க சிறந்த நிதிக் கொள்கைகளைப் பின்பற்றி வருவதையும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பகிர்ந்து உள்ள தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

உதாரணமாக, நாட்டிலேயே கடந்த மூன்று நிதியாண்டுகளில் கடனைக் குறைத்த ஒரே மாநிலமாக ஒடிசா விளங்குகிறது. ஒடிசா மாநிலம், 2019 - 2020ஆம் நிதியாண்டில் 1.8 சதவீதமும், 2020-21ஆம் நிதியாண்டில் 8.4 சதவீதமும், 2022 - 2023 நிதியாண்டில் 12 சதவீதமும் மாநிலத்தின் பொதுக்கடனை குறைத்து, கடந்த ஐந்து நிதியாண்டுகளில் வேறு எந்த மாநில அரசாலும் செய்ய முடியாத சாதனையை நிகழ்த்தி உள்ளது.

இதற்கு நேர்மாறாக, சில மாநிலங்கள் இந்தக் காலக்கட்டத்தில் தங்கள் நிலுவையில் உள்ள கடன்களில் பெரிய அளவில் உயர்வினை அறிவித்து உள்ளன. உதாரணமாக, நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கிடையில் அதிக கடனைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அதன் கடன் விகிதம், இரட்டை இலக்க அதிகரிப்பைப் பதிவு செய்து உள்ளது.

2018 - 2019ஆம் நிதியாண்டில், அம்மாநிலத்தின் கடன் சுமை 22.9 சதவீதமாக இருந்த நிலையில், 2019 - 2020ஆம் ஆண்டில் 15.1 சதவீதமும், பின்னர் 2020 - 2021ஆம் நிதியாண்டில் மிகப்பெரிய அளவில் 23.1 சதவீதமும் உயர்ந்து, பின்னர் 2021 - 2022ஆம் நிதியாண்டில் 15.4 சதவீதமும், 2022 - 2023 நிதியாண்டில் 14.8 சதவீதமும் அதிகரித்து உள்ளது.

பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பெரும் கடனில் உள்ள மாநிலங்கள் தங்கள் நிலுவையில் உள்ள கடன்களின் வருடாந்திர அதிகரிப்பை ஆண்டுக்கு 9 - 10 சதவீதமாக கட்டுப்படுத்த முயற்சிப்பதாக, அந்த தரவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்திலும் இந்த நிலையே உள்ளது. இது நாட்டிலேயே இரண்டாவது அதிக கடன் சுமையைக் கொண்டு உள்ள மாநிலமாக உள்ளது. ஆனால், கடந்த ஐந்து நிதியாண்டுகளில் அதன் கடன் சுமையின் ஆண்டு அதிகரிப்பை சுமார் 10 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக வைத்து இருக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மறுபுறம், தெலங்கானா மற்றும் டெல்லி போன்ற வேறு சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கள் கடன் சுமையில் குறிப்பிடத்தக்க வருடாந்திர அதிகரிப்பைக் கண்டு உள்ளன.

உதாரணமாக, தெலுங்கானா மாநிலத்தின் கடன் சுமையின் ஆண்டு அதிகரிப்பு, கடந்த ஐந்து நிதியாண்டுகளில் ஒவ்வொன்றிலும் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. டெல்லியைப் பொறுத்தவரை, கடந்த மூன்று நிதியாண்டுகளில் 2020 - 2021ஆம் நிதியாண்டில் 161.5 சதவீதமாகவும், 2021 - 2022ஆம் நிதியாண்டில் 73.5 சதவீதமாகவும், 2022 - 2023ஆம் நிதியாண்டில் 33.3 சதவீதமாகவும் அதிகரித்து உள்ளது.

இதையும் படிங்க: Today Rasipalan: பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

Last Updated : Jul 25, 2023, 7:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details