தமிழ்நாடு

tamil nadu

மார்கதர்சி சிட்பண்ட் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க தடை - ஆந்திர உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 10:58 PM IST

Margadarshi Chitfund issue supreme court order: மர்கதர்சி சிட்பண்ட் நிறுவனத்திற்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தடை விதித்து ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Margadarsi
Margadarsi

டெல்லி: மறு உத்தரவு வரும் வரை மார்கதர்சி சிட்பண்ட் நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்குகளை விசாரிக்க வேண்டாம் என ஆந்திர உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்கக் கோரி ஆந்திர பிரதேச அரசுக்கும், சிஐடி போலீசாருக்கு உச்ச நீதிமனர்ம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

மார்கதர்சி சிட்பண்ட் நிறுவனத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற நிறுவனம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பங்கஜ் மிட்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (டிச. 15) விசாரித்தது.

இந்த வழக்கு விசாரணையில் மார்கதர்சி நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ரா, "ஒரே பிரச்சினையில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவற்றில் சில தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மற்றவை ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும்" தெரிவித்தார்.

இதனிடையே குறுக்கிட்ட நீதிபதிகள், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுவதால், உயர்நீதிமன்றம் எப்படி தலையிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து வாதிட்ட வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ரா, வழக்கின் விசாரணையை தெலுங்கானா உயர்நீதிமன்றம் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அதேநேரம், பல வழக்குகள் மற்றும் மனுக்கள் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

இதையடுத்து ஆந்திர மற்றும் தெலுங்கானா உயர்நீதிமன்றங்களில் மார்கதர்சி நிறுவனம் மீதான விசாரணை விவரங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அறிக்கை அளிக்கக் கோரி ஆந்திர பிரதேச அரசுக்கும், சிஐடி போலீசாருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மறு உத்தரவு வரும் வரை மார்கதர்சி நிறுவனம் தொடர்புடைய வழக்கில் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தக் கூடாது என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க :மார்கதர்சி சிட் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் 111வது கிளை இன்று (டிச.15) திறப்பு..!

ABOUT THE AUTHOR

...view details