தமிழ்நாடு

tamil nadu

செல்போன் பறிப்பின்போது ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த ஆசிரியர் படுகாயம்!

By

Published : Aug 14, 2023, 4:14 PM IST

டெல்லியில் ஆட்டோவில் சென்ற ஆசிரியரிடம் மர்மநபர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டபோது, ஆட்டோவிலிருந்து கீழே விழுந்த ஆசிரியர் பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

South Delhi
கோப்புப்படம்

டெல்லி:டெல்லியில் ஜவஹர் பார்க் பகுதியைச் சேர்ந்த யோவிகா சவுத்ரி (24) என்ற இளம்பெண், சாகேத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 11ஆம் தேதி பள்ளியில் இருந்து ஆட்டோவில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் கையில் விலை உயர்ந்த ஐஃபோனை வைத்திருந்ததாக தெரிகிறது.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்மநபர்கள், ஆசிரியரின் கையில் இருந்த ஐஃபோனை பறிக்க முயற்சி செய்தனர். ஆசிரியர்கள் போனை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால், அவர்கள் போனை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தனர். அதில், நிலைதடுமாறிய ஆசிரியர் ஆட்டோவிலிருந்து வெளியே விழுந்தார். பின்னர், அவர்கள் செல்போனை பறித்துக் கொண்டு தப்பித்துச் சென்றுவிட்டனர்.

ஆசிரியர் கீழே விழுந்து சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், பாதிக்கப்பட்ட ஆசிரியர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பாதிக்கப்பட்ட ஆசிரியரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து இன்று(ஆகஸ்ட் 14) சாகேத் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, "கடந்த 11ஆம் தேதி பிற்பகலில் இந்த செல்போன் பறிப்பு சம்பவம் நடந்தது. பிற்பகல் 3.23 மணிக்கு சாகேத் காவல் நிலையத்திற்கு அழைப்பு வந்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, ஆசிரியர் யோவிகா சவுத்ரி என்பவர் காயமடைந்திருந்தார். அவர் சாகேத் பகுதியில் கோகா மார்க்கெட் அருகே சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஆசிரியர் காயமடைந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்" என்றார். இந்த வழிப்பறி சம்பவம் சாகேத் காவல் நிலைய பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் பறிப்பு சம்பவங்களின்போது பொதுமக்கள் காயமடைவதும், சில நேரங்களில் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்களும் நடக்கின்றன. கடந்த மாதம் சென்னையில் ரயிலில் பயணித்த இளம்பெண்ணிடம் மர்மநபர் ஒருவர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டபோது, அந்த இளம்பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: செல்போன் பறிப்பு: ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாப பலி!

ABOUT THE AUTHOR

...view details