தமிழ்நாடு

tamil nadu

நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரம் - 6 பேருக்கு தொடர்பு? போலீசார் வலைவீச்சு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 7:20 PM IST

security Breach in parliament : நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி சதித்திட்டத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் தலைமறைவானவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் டெல்லி போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி : நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று (டிச. 13) வழக்கம் போல் நாடாளுமன்றம் கூடிய நிலையில், கடந்த 2001ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தினம் அனுசரிக்கப்பட்டது.

தொடர்ந்து அவை இயங்கிக் கொண்டு இருந்த நிலையில், பார்வையாளர்கள் பகுதியில் இருந்து அவைக்குள் இரண்டு பேர் குதித்து களேபரத்தில் ஈடுபட்டனர். மேலும், எம்.பி.க்கள் இருக்கைகள் மீது தாவிக் குதித்தும் அங்கும் இங்கும் ஓடியும் உறுப்பினர்களுக்கு போக்கு காட்டினர். தொடர்ந்து கையில் இருந்து மர்ம கருவிகளை எம்.பிக்களை நோக்கி வீசினர்.

அதில் இருந்து வண்ண புகைகள் கிளம்பின. இதையடுத்து, சுற்றிவளைத்த எம்.பிக்கள் இரண்டு பேரையும் பிடித்து அவை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அதேபோல், நாடாளுமன்றத்திற்கு வெளியே வண்ண புகைகளை வீசிய கூச்சலில் ஈடுபட்ட பெண் உள்பட இருவரையும் பாதுகாவலர்கள் பிடித்தனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் தீயாய் பரவிய நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நாடாளுமன்றத்தில் மக்களவையில் அத்துமீறி உள்ளே நுழைந்து களேபரத்தில் ஈடுபட்ட இருவரும் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைசூரைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹாவின் நுழைவு ரசீதை பயன்படுத்தியதாக முதல் கட்ட தகவல் வெளியாகி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு வளாகம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார். இந்நிலையில், இந்த சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டறிப்பட்டு உள்ளதாக டெல்லி போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர்.

ஆறு பேரில் 5 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் ஒருவர் மட்டும் தலைநகர் டெல்லிக்கு வெளியே இருந்து வந்து உள்ளதாகவும், அவர் அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டு உள்ளதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரத்தை தொடர்ந்து இந்திய புலனாய்வு அதிகாரிகள் புதிய நாடாளுமன்றத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க :"2040க்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பத் திட்டம்" - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

ABOUT THE AUTHOR

...view details