ஹிமாச்சலப்பிரதேசம்:ஹிமாச்சலப் பிரதேசத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சோலன், சிம்லா, குலு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. குலு மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 24ஆம் தேதி) அன்னி என்ற பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுக்குமாடி குடியிருப்புகள் சீட்டுக்கட்டுப் போல சரிந்து விழும் பரபரப்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. நிலச்சரிவு காரணமாகவே வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், இந்த சம்பவத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் குலு மாவட்டத்தில் கனமழை காரணமாக, குலு - மண்டி நெடுஞ்சாலை சேதமடைந்தது. இதனால், அந்த வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. போக்குவரத்து ஸ்தம்பித்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இது தொடர்பாக வாகன ஓட்டி ஒருவர் கூறும்போது, "போக்குவரத்து நெரிசலால் சுமார் 5 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் நின்று கொண்டிருக்கின்றன. நீண்ட நேரமாக நாங்கள் இங்கேயே நின்று கொண்டிருக்கிறோம். சிற்றுண்டி, குடிநீர் என எதுவும் கிடைக்காமல் தவித்து நிற்கிறோம்" என்றார்.