தமிழ்நாடு

tamil nadu

சஞ்சு சாம்சனை நிராகரிக்கிறதா பிசிசிஐ? பின்னணி என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 11:04 PM IST

sanju samson: உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில் சஞ்சு சாம்சன் நிராகரிக்கப்பட்டுள்ளதால் பிசிசிஐ-யை அவரது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: ஐசிசி (ICC) நடத்தும் 13-வது உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் தேர்வுக்குழு உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது.

இதில், விக்கெட் கீப்பரும், பேட்டருமான சஞ்சு சாம்சனை விடுத்து சூர்ய குமார் யாதவ் இடம்பெற்றது ரசிகர்கள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆசிய கோப்பையில் அவர் இடம் பெறாதது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அவரை தொடர்ந்து நிராகரிப்பது ஏன் என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் மீம்ஸ் மூலம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் அனுபவ மிக்க வீரர்களாக விராட் கோலி, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல் ஆகியோரும், பேட்டிங் வரிசையில் கில், ஷ்ரேயாஸ் ஐயர், விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் மற்றும் பந்துவீச்சில் முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல் ஆகியோரும் தேர்வு ஆகியுள்ளனர்.

ஏற்கனவே ஆல் ரவுண்டராக அணியில் ஜடேஜா இருக்கையில், பேட்டிங் தேவை என்று யோசித்தால் அணியில் சூழல்பந்துவீசசில் சிறந்த வீரரும் அனுபவம் வாய்ந்த வீரருமாக அஸ்வினை தேர்வு செய்து இருக்கலாமே. மேலும், இந்தியா அணியின் நட்சத்திர வீரரான யுஸ்வேந்திர சஹல் உலக கோப்பை அணியில் சேர்க்கப்படாமல் விட்டதும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இவர் இதுவரை 72 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் 75 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் 121 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சின் சராசரி 26.77 ஆக உள்ளது. இப்படி ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்குபவரை தேர்வு குழு இந்தியா அணியில் சேர்க்க தவறியுள்ளது.

பேட்டிங் வரிசையை எடுத்துக்கொண்டால், தொடக்கத்தில் ரோஹித் சர்மா மற்றும் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உள்ளனர். விக்கெட் கீப்பரை எடுத்துக்கொண்டால் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடைந்து வர நாட்கள் ஆகும் என்பதால், அவருக்கு பதிலாக இடது கை பேட்ஸ்மேனான இஷான் கிஷன் தேர்வாகி உள்ளார். ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 82 ரன்கள் அடித்து, இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்காது.

அதே போல் சூர்ய குமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 28 வயதான கேரளவை சேர்ந்த சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. சஞ்சு சாம்சன் 13 போட்டிகளே விளையாடி உள்ள நிலையில், அவரது சராசரி 55.71 ஆக உள்ளது.

ஆனால் மாறாக 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ் வெறும் 24.33 சராசரியையே கொண்டுள்ளார். மேலும், இந்த வருட ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து மூன்று முறை டக் அவுட் ஆகியுள்ளார். இப்படி தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் சோதப்பி வரும் இவரை அணியில் சேர்த்த பிசிசிஐ.

வெறும் 13 போட்டிகளில் மட்டுமே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு பிசிசிஐ தொடந்து ஓரம்கட்டி வருகிறது. இப்படி பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல் என விளையாட்டில் நல்ல திறமையை கொண்டுள்ள வீரர்களை தொடர்ந்து புறக்கணிப்பது பிசிசிஐயின் அரசியலையே வெளிபடுத்தோ என சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: World Cup India Squad : உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details