தமிழ்நாடு

tamil nadu

நாளை சபரிமலை மண்டல பூஜையின் சிகர நிகழ்வு!

By

Published : Dec 26, 2022, 9:52 AM IST

நடப்பாண்டு சபரிமலை சீசன் முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை நாளை(டிச.27) நடக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

திருவனந்தபுரம்:சபரிமலை கோயில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த மாதம் 16-ஆம் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் நடை திறந்த நாள் முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகரிப்பு காரணமாக ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில், நடப்பு சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நாளை (டிச.27) நடக்கிறது. திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973-ஆம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 சவரன் எடையுள்ள தங்க அங்கி மண்டல பூஜைக்கு முதல் நாள் அதாவது 26-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அய்யப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். இந்த தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பத்தனம்திட்டா ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து சபரிமலைக்கு கடந்த 23-ஆம் தேதி தேதி தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) மதியம் பம்பை விநாயகர் கோயில் வந்தடைகிறது. அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு செல்வார்கள். மாலை 5.30 மணிக்கு சன்னிதானம் சென்றடையும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு 18-ஆம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு ராஜீவரரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும்.

பின்னர் 18-ஆம் படி வழியாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்பட்டுமாலை 6.30 மணிக்கு ஐயயப்பனுக்கு அணிவிக்கப்படும். அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை மண்டல பூஜை நாளை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். 11 மணிக்கு களபாபிஷேகம் முடிந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் தங்கி அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் அய்யப்பனுக்கு பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும்.

பகல் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பிறகு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். பூஜைகளுக்கு பின் இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு மண்டல பூஜை நிறைவு பெறும். இதனால் தங்க அங்கியை சன்னிதானத்துக்கு கொண்டு வருவதையொட்டி இன்று பிற்பகலில் 18-ஆம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை. பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை மீண்டும் 30-ஆம் தேதி திறக்கப்படும். மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14-ஆம் தேதி நடைபெறும்.

இதையும் படிங்க: பான் - ஆதார் இணைப்பு: வருமான வரித்துறை வார்னிங்!

ABOUT THE AUTHOR

...view details