டெல்லி :தமிழ் கலாசாரம் மற்றும் தமிழர்கள் ஆதி அந்தம் அற்ற அளவாக உலகளவில் பரவி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் வீட்டில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடபட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் மக்கள் தொடக்கம் முடிவு என்ற நிலைக்கு அப்பாற்ப்பட்டு உலகம் முழுவதும் பரவி இருப்பதாக கூறினார். சென்னை முதல் கலிபோர்னியா, மதுரை முதல் மெல்போர்ன் வரை என தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை சுமந்து செல்லும் மக்களை காண முடிகிறதாக பிரதமர் மோடி கூறினார்.
எடுத்துக்காட்டாக தமிழர்களின் பொங்கல் அல்லது புத்தாண்டு பண்டிகை உலகளவில் கொண்டாடப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். பழமையிலும் புதுமை காணும் பண்டிகையாக தமிழர்களின் புத்தாண்டு கொண்டாப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். உலகின் பழமையான மொழி தமிழ் என்றும் ஒவ்வொரு இந்தியனும் தமிழ் மொழி குறித்து பெருமைபடுவதாகவும் அவர் கூறினார்.
தமிழ் இலக்கிய உலகளவில் போற்றப்படுவதாகவும், தமிழ் மற்றும் தமிழர்களின் பண்புகளை கூறும் வகையிலான வரலாற்று சான்றுகளை தமிழ் சினிமா மற்றும் கலைத் துறை வழங்கி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்த போது தனது தொகுதியில் அதிகளவில் தமிழ் மக்கள் வாழ்ந்ததாக மோடி குறிப்பிட்டார்.
குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் தமிழர்களின் பங்கு அளப்பரியது என்றும் அவர்கள் தான் தன்னுடைய வாக்காளர்களாக இருந்து எம்.எல்.ஏ.வாகவும், முதலமைச்சராகவும் தான்னை ஆக்கியதாக பிரதமர் கூறினார். தமிழர்களுடன் தான் செலவிட்ட நேரத்தை தன்னால் மறக்கவே முடியாது என குறிப்பிட்டார்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும் சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவின் மறு சீரமைப்பில் தமிழ் மக்களின் பங்களிப்பு நாட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். கல்வி, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட துறைகளின் தமிழர்களின் பங்களிப்பு ஈடு இணையற்றது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
ஒரு குடிமகனாக நாட்டின் பாரம்பரியத்தை மேம்படுத்துவது நமது கடைமை எனக் கூறிய பிரதமர் மோடி அந்த சேவையில் ஈடுபட மக்கள் தனக்கு வாய்ப்பு அளித்து உள்ளதாக கூறினார். ஐநா சபையில் தமிழ் மொழி குறித்து மேற்கொள் காட்டி தான் பேசிய போது உலகளாவிய தலைவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.