தமிழ்நாடு

tamil nadu

"ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்" - உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 2:34 PM IST

Article 370 Case verdict Reactions: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

political party members Reaction to the supreme court verdict on Article 370 Case
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்

டெல்லி:ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து 370ஐ கடந்த 2019ஆம் ஆண்டு நீக்கிய மத்திய அரசு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து அறிவித்திருந்தது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் பொதுநல வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

20க்கும் மேற்பட்ட இந்த வழக்குகளை ஒரே வழக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள், சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரிக்கத் துவங்கியது.

இந்த வழக்கின் விசாரணை 16 நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்று (டிச.11) காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது செல்லும் எனவும், அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்தி முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனவும் லடாக் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஜா ஹரி சிங்கின் மகனுமான கரன் சிங், “நான் அதை வரவேற்கிறேன். என்ன நடந்திருந்தாலும் அது இப்போது அரசியல் சாசன படி செல்லுபடி ஆகும் என உறுதியாகிவிட்டது. விரைவில் மாநில அந்தஸ்தை மீட்க வேண்டும் என நான் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கிறேன்.

காஷ்மீரில் ஒரு பிரிவினர் இந்த தீர்ப்பில் மகிழ்ச்சியடையாமல் உள்ளனர். தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொள் என்பது தான் அவர்களுக்கு நான் கூறும் ஆலோசனை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களின் போராட்டம் இனி தேர்தலை நோக்கியதாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (Democratic Progressive Azad Party) தலைவர் குலாம் நபி ஆசாத், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளித்துள்ளது. இந்த தீர்ப்பினால் மக்கள் மகிழ்ச்சியடையவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் ஜே&கே என்சி கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, “ஏமாற்றம் தான் ஆனால் நாங்கள் மனம் தளரவில்லை. இந்த நிலைக்கு வருவதற்கு பாஜகவிற்கு நீண்ட காலமானது. நாங்களும் நீண்ட கடினமான பயணத்திற்குத் தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குத் தனது வரவேற்பினைத் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி அவரது X சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சட்டப்பிரிவு 370 தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. 2019 ஆகஸ்ட் 5 அன்று இந்திய நாடாளுமன்றம் எடுத்த முடிவை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்துகிறது. இது ஜம்மு, காஷ்மீர், லடாக்கில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு நம்பிக்கை, முன்னேற்றம், ஒற்றுமைக்கான உறுதியான அறிவிப்பு.

இந்தியர்களின் ஒற்றுமையை நீதிமன்றம் வலுப்படுத்தியுள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானது. முன்னேற்றத்திற்கான பலன் உங்களைச் சென்றடைவது மட்டுமல்லாமல், 370 சட்டப்பிரிவின் காரணமாக நமது சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் அதன் பலன்களை வழங்குவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.

இன்று வழங்கப்பட்டது வெறும் தீர்ப்பு மட்டும் அல்ல, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாக்குறுதியாகவும், வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டி எழுப்புவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அவரது X சமூக வலைத்தள பக்கத்தில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சட்டப்பிரிவு 370ஐ நீக்க ஒரு தொலைநோக்கு முடிவை எடுத்தார்.

ஒருகாலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்த பள்ளத்தாக்கில் புதிய வளர்ச்சியையும், மனித வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தையும் கொண்டு வந்துள்ளது. சுற்றுலா மற்றும் விவசாயத்துறை செழித்து காஷ்மீர், ஜம்மு, லடாக் மக்களின் வருமானத்தை உயர்த்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 370ஐ ரத்து செய்தது அரசியலமைப்புக்கு உட்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் தங்களின் ஆதரவையும், அதிருப்தியையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது; சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் - நீதிமன்ற தீர்ப்பு விவரம்!

ABOUT THE AUTHOR

...view details