ஹைதராபாத்: அசாம் மாநிலத்தில் கடந்த மாதம் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ வழக்குகளில், ஆயிரக்கணக்கான இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இரவு நேரங்களில் திடீரென வீடுகளுக்குள் புகுந்த போலீசார், திருமணமான இளைஞர்களை கைது செய்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை திருமணம் செய்தவர்களை இப்போது கைது செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அசாம் மாநிலத்தில் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு குழந்தை திருமணமே மிகப்பெரிய காரணம் என்றும், அதன் காரணமாகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அம்மாநில அரசு கூறியது. மேலும், தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி, அசாம் மாநிலத்தில் சுமார் 32 சதவீத பெண்கள், 18 வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்து கொள்வதாகவும், சுமார் 12 சதவிகித பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்பே கர்ப்பமாகின்றனர் என்றும் கூறியது.
குழந்தைகள் இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், பெண்கள் குழந்தை திருமண விகிதத்தில் தேசிய அளவிலான சராசரியைவிட அசாம் மாநிலத்தில் அதிகமாக இருப்பதாகவும் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா விளக்கமளித்திருந்தார்.
அதனால் முதலமைச்சரின் அறிவுறுத்தல்படியே போலீசார் இளைஞர்களை போக்சோவிலும், குழந்தை திருமண தடை சட்டத்திலும் கைது செய்தனர். ஓரிரு நாட்களிலேயே ஆண்கள், பெண்கள் என சுமார் மூன்றாயிரம் இளைஞர்கள் கைதாகினர். 14 வயதுக்கும் கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது போக்சோ வழக்கும், 14 முதல் 18 வயதுடைய சிறுமிகளை திருமணம் செய்வதவர்கள் மீது குழந்தை திருமண தடை சட்ட வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கைதான அனைவரும் திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர்கள். 18 வயதை எட்டாமல் திருமணம் செய்திருந்தாலும், பெரும்பாலும் இருவரது விருப்பத்துடனேயே திருமணம் செய்திருந்தனர். இதனால், அசாம் அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த கைது நடவடிக்கை குறித்து பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், பிரசவத்திற்காக சிறுமிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்போது, அதுகுறித்த தகவல் தங்களுக்கு கிடைக்கும் என்றும், அதை வைத்து சிறுமியின் கணவரை தாங்கள் எளிதாக கைது செய்வோம் என்றும் கூறினார்.
காவல்துறை கூறும் இந்த எளிய நடவடிக்கை, விழிப்புணர்வில்லாத எளிய மக்களை கடுமையாக பாதித்தது என்றுதான் கூற வேண்டும். சான்றாக, அசாமில் 16 வயது கர்ப்பிணியை, கைது நடவடிக்கைக்கு பயந்து அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. இதனால் அந்த கர்ப்பிணி இறந்துவிட்டார்.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், திருமண வயது குறித்து சட்டங்கள் இயற்றப்பட்டாலும், இன்றளவும் ஆதிவாசி, பழங்குடியின மக்கள் பலர் 18 வயதை எட்டாமலேயே திருமணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படியிருக்கையில் அசாமில் விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.
கவுஹாத்தி உயர்நீதிமன்றம் கேள்வி: