டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் காஷ்மீர் தலைவர்களுடன் வரலாற்று சிறப்புமிக்க கூட்டம் ஒன்றை இன்று (ஜூன் 24) நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆஸாத், தாதா சந்த் கா மிர், தேசிய மாநாட்டு கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி சார்பில் அல்தாஃப் புஹாரி, மக்கள் மாநாடு கட்சி சார்பில் சஜ்ஜாத் லோன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்ஒய் தாரிகாமி, தேசிய சிறுத்தைகள் கட்சி சார்பில் பீம் சிங் மற்றும் பாஜக தலைவர்கள் ரவீந்தர் ரெய்னா, நிர்மல் சிங், கவிந்தர் குப்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு அந்தஸ்து நீக்கம்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்ட பின்னர் மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் நடத்திய முதல் கூட்டம் இதுவாகும்.
கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் தலைவர்களின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் கேட்டுள்ளார். அவர்கள் நேர்மையான கருத்துகளை பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.