தமிழ்நாடு

tamil nadu

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறையில் என்னென்ன வசதிகள் தெரியுமா?

By

Published : Aug 8, 2023, 6:20 PM IST

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், இருள் நிறைந்த குறுகிய அறையில் திறந்தவெளி கழிப்பறை, மூட்டைப்பூச்சி மற்றும் எறும்புக் கடியால் அவரது உடல் நலன் பாதிக்கப்பட்டு உள்ளதாக இம்ரான் கானின் வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.

Imran Khan
Imran Khan

இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, சிறையில் சி வகுப்பு அறை ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், மூட்டைப் பூச்சிகளின் கடியில் சிக்கி உடல் நலன் பாதிக்கக் கூடிய நிலையில் அவர் இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது, வெளிநாட்டுப் பயணங்கள், உலக நாடுகள் தலைவர்களுடனான சந்திப்பு, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது வழங்கப்பட்ட விலையுயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்டப் பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் தனிப்பட்ட முறையில் முறைகேடாக விற்றதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டு தெரிவித்தது.

அரசு கருவூலத்திற்கு வரும் பரிசுப்பொருட்களை பேணிக் காக்கும் பணியை தோஷகனா துறை மேற்கொண்டு வரும் நிலையில், இம்ரான் கான் மீது இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த இஸ்லாமாபாத்தை தளமாக கொண்ட மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஹுமாயுன் திலவர் இம்ரான் கானை குற்றவாளி என அறிவித்தார்.

மேலும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 1 லட்ச ரூபாய் அபராதத்தை கட்டத் தவறினால் இம்ரான் கானுக்கு 6 மாதங்கள் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கக் கோரி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இதையடுத்து இம்ரான் கானை கைது செய்த போலீசார், பஞ்சாப் மாகாணத்தில் அட்டோக் நகரில், உள்ள சிறையில் அடைத்தனர். வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பான ஆவணங்களில் இம்ரான் கானிடம் கையெழுத்து வாங்க, அவரது வழக்கறிஞர் பஞ்சோதா அட்டோக் சிறைச்சாலைக்குச் சென்றார்.

ஏறத்தாழ ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் இம்ரான் கானுடன் வழக்கறிஞர் பஞ்சோதா பேசினார். தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சிறையில் கழிக்கத் தயாராக இருப்பதாக இம்ரான் கான் தெரிவித்ததாக பஞ்சோதா கூறினார். மேலும், சிறையில் இம்ரான் கானுக்கு, சி வகுப்பு அறை ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த அறையில் போதிய வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இருள் அடைந்த மற்றும் மிகவும் குறுகிய அறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் திறந்தவெளி கழிப்பறையே அவருக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும் வழக்கறிஞர் பஞ்சோதா தெரிவித்தார். மேலும், அவர் பகலில் எரும்பு உள்ளிட்ட பூச்சிகளாலும் இரவில் கொசு, மூட்டை பூச்சிக் கடியாலும் கடுமையாக அவதிப்பட்டு வருவதாக வழக்கறிஞர் கூறினார்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன், தீவிரவாதியைப் போல் நடத்தப்படுவதாகவும், யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறினார். இருட்டு நிறைந்த அறையில் அடைக்கப்பட்டு உள்ள இம்ரான் கானுக்கு நாளிதழ், தொலைக்காட்சி கூட சிறை நிர்வாகம் வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அதேபோல், நீதிமன்ற உத்தரவை அடுத்து லாஹூரில் உள்ள தனது வீட்டை முற்றுகையிட்ட போலீசார், கைது வாரண்ட்டை கூட காண்பிக்கவில்லை என்றும், தனது மனைவியின் அறையை உடைக்க காவலர்கள் முயன்றதாகவும் இம்ரான் கான் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதையும் படிங்க :"முழு நாடும் எனது வீடு".. மீண்டும் அரசு இல்லம் ஒதுக்கீடு குறித்து ராகுல் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details