தமிழ்நாடு

tamil nadu

MP Truck Accident: ஆற்றில் மினி லாரி கவிழ்ந்து: 12 பேர் நிலை என்ன?

By

Published : Jun 28, 2023, 11:41 AM IST

மத்தியப்பிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தில் மினி லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

ம.பியில் மினி லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்து - மீட்புப்பணிகள் தீவிரம்
ம.பியில் மினி லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்து - மீட்புப்பணிகள் தீவிரம்

தாட்டியா:மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள பில்ஹேட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், டிகாமகர் மாவட்டத்தில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக மினி லாரியில் சென்று கொண்டிருந்து உள்ளனர். இதனையடுத்து தாட்டியா மாவட்டத்தில் உள்ள புஹாரா ஆற்றின் அருகில் மினி லாரி வந்து கொண்டிருந்து உள்ளது.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த விபத்து இன்று (ஜூன் 28) காலை 6 மணிக்கு நிகழ்ந்திருக்கும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தற்போது அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 12 பேர் இந்த விபத்தில் இறந்திருக்கலாம் என தாட்டியா எஸ்பி பிரதீப் ஷர்மா கூறி உள்ளார். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த தாட்டியா எஸ்பி பிரதீப் ஷர்மா, மினி லாரி ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 18 பேருக்கும் மேலாக காயம் அடைந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே, மத்தியப்பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா விபத்து குறித்து வருத்தம் தெரிவித்து உள்ளார். மேலும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். அதேநேரம், காயம் அடைந்தவர்களுக்கு அனைத்து வகையிலும் தேவையான உதவிகளை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் மிஷ்ரா வலியுறுத்தி உள்ளார்.

முன்னதாக கடந்த ஜூன் 17ஆம் தேதி, மாநிலத்தின் மொரேனா மாவாட்டத்தில் டம்பர் லாரி உடன் பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானது. தேவ்புரி பாபா மந்திர் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் காயம் அடைந்தனர். இதில் விபத்துக்கு உள்ளான பேருந்து குவாலியரில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்ததாக சராய்சோலா காவல் துறையினர் தெரிவித்து இருந்தனர்.

அது மட்டுமல்லாமல், கடந்த ஜூன் 25ஆம் தேதி ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், காண்டெடுலி பகுதியைச் சேர்ந்த மக்கள், திகாபஹாண்டி நகரில் நடைபெற்ற திருமண நிகழ்விற்குச் சென்று விட்டு திரும்பி வருகையில் இந்த விபத்து நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஒடிஷாவில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 12 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details