டெல்லி: எல்லைப் பாதுகாப்பு படை (BSF), மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), இந்தோ-திபெத் எல்லை காவல் படை (ITBP) உள்ளிட்ட காவல்படைகளுக்கு ஆட்சேர்ப்புக்காக CAPF (மத்திய ஆயுதக் காவல் படை) தேர்வு நடத்தப்படுகிறது.
இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இதனால் இந்தி, ஆங்கிலம் தெரியாத இளைஞர்கள் இத்தேர்வை எதிர்கொள்வதில் சிரமத்தை சந்தித்து வந்தனர். இதனால், இத்தேர்வை பிராந்திய மொழிகளில் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் சிஆர்பிஎப் தேர்வு இந்தி, ஆங்கிலம் மற்றும் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ், அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்புரி, கொங்கனி ஆகிய 13 பிராந்திய மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பயனளிக்கும் என உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிஏபிஎப் தேர்வை பிராந்திய மொழிகளில் எழுதுவது தொடர்பாக உள்துறை அமைச்சகம் மற்றும் பணியாளர் தேர்வாணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. 2024 ஜனவரி 1ம் தேதி முதல் சிஏபிஎப் தேர்வு இந்தி, ஆங்கிலம் மற்றும் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மெகுல் சோக்சியை நாடு கடத்த தடை - ஆண்டிகுவா நீதிமன்றத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு!